கரூரோடு சுருங்கிய அமைச்சர் செந்தில்பாலாஜி அதிகாரம்! விடாது துரத்தும் அமலாக்கத்துறை! அடுத்தது என்ன?
சென்னை: கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் என்கிற மிகப்பெரிய பொறுப்பிலிருந்து நேற்றைய தினம் விடுவிக்கப்பட்டுள்ளார் செந்தில்பாலாஜி. இதற்கான அரசாணையில் தலைமைச் செயலாளர் நேற்றே கையெழுத்திட்ட நிலையில் அது இன்று வெளிவந்துள்ளது.
இதனிடையே இந்த நடவடிக்கை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆதரவாளர்களுக்கு பெரும் கலக்கத்தையும், ஏமாற்றத்தையும் அளித்துள்ளது. அதே நேரத்தில் கோவையில் உள்ள திமுகவினர் பலர் இந்த மாற்றத்தை வெடி வெடிக்காத குறையாக கொண்டாடவும் செய்கின்றனர்.

கடந்த ஜூன் 13ஆம் தேதி காலையில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் சென்னை இல்லத்தில் சோதனை நடத்த தொடங்கிய அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் 13 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்த நிலையில், அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது.
இதையடுத்து ஜூன் 14ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அமைச்சர் செந்தில்பாலாஜி. அவருக்கு இதயத்தில் 3 அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து அவரது குடும்பத்தினர் விருப்பத்தின் பேரில் நீதிமன்ற உத்தரவு மூலம் காவேரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்டார்.
இதனிடையே செந்தில்பாலாஜியை நீதிமன்றக் காவலில் எடுத்த அமலாக்கத்துறை, மேற்கொண்டு எதுவும் விசாரிக்க முடியாமல் தவித்து வருகிறது. காவேரி மருத்துவமனையில் 8 நாட்கள் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்த அவருக்கு ஜூன் 21ஆம் தேதி அதிகாலை இதய அறுவைச் சிகிச்சை நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து தற்போது மருத்துவமனையில் ஓய்வில் இருந்து வருகிறார் அமைச்சர் செந்தில்பாலாஜி. இந்நிலையில் அமைச்சர் பதவியிலிருந்து செந்தில்பாலாஜியை நீக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல ஆளுநரும் அழுத்தம் கொடுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் அமைச்சராக செந்தில்பாலாஜியை அமைச்சரவையில் தொடர வைக்க முடியாது என்றும் அவரை நீக்குமாறும் முதல்வருக்கு ஆளுநர் கடிதம் கூட எழுதினார்.
ஆனாலும் செந்தில்பாலாஜியை முழுமையாக கைவிட விரும்பாத ஸ்டாலின், அவரிடமிருந்த 2 துறைகளை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் முத்துசாமிக்கு பகிர்ந்துகொடுத்துவிட்டு இலாகா இல்லாத அமைச்சராக செந்தில்பாலாஜியை தொடர வைக்கிறார். அதுவும் தற்போது மிகுந்த பேசு பொருளாக மாறிவிட்டது. செந்தில்பாலாஜிக்கு திமுகவில் இவ்வளவு முக்கியத்துவம் ஏன் என விவாதங்கள் நடக்க ஆரம்பித்துவிட்டன.
யாருக்கும் இல்லாத வகையில் செந்தில்பாலாஜிக்கு கொடுக்கப்படும் அதீத முக்கியத்துவம் கட்சியிலும் பலரது கண்களை உருத்தத் தொடங்கியது. இந்தச் சூழலில் தான், முதற்கட்டமாக கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் என்ற பதவியை மட்டும் பறித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இதன் மூலம் அவர் இனி அவர் கோவை மாவட்ட நிர்வாகத்தில் தலையிடமுடியாது.












Click it and Unblock the Notifications