செந்தில் பாலாஜிக்கு போதாத காலம்! 47 ஆவது முறையாக நீதிமன்றக் காவல் நீட்டிப்பு
சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், வங்கியின் கவரிங் லெட்டர் தொடர்பான ஆவணங்களை பெறுவதற்காக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டார்.
கரூர் சிட்டி யூனியன் வங்கியில் உள்ள கவரிங் லெட்டர் தொடர்பான ஆவணங்களை வழங்க உத்தரவிடக்கோரி செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யபட்ட மனுவை விசாரித்த நீதிபதி அல்லி, கவரிங் லெட்டர் தொடர்பான ஆவணங்களை செந்தில்பாலாஜி தரப்பிற்கு வழங்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.

இதன் அடிப்படையில், செந்தில் பாலாஜி நீதிபதி அல்லி முன்பாக ஆஜர்படுத்தபட்ட பின் கவரிங் லெட்டர் தொடர்பான ஆவணங்களை கையெழுத்திட்டு பெற்றுக் கொண்டார்.
மேலும், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜூலை 18ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இதன் மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 47வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது இன்று உத்தரவு பிறப்பிக்கபடும் என அறிவித்திருந்த நிலையில், செந்தில் பாலாஜி தரப்பில் புதிதாக இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அதில், வங்கி தொடர்பான அசல் ஆவணங்களுக்கும், அமலாக்கத்துறை வழங்கிய ஆவணங்களுக்கும் வேறுபாடுகள் இருப்பதாகவும், தங்களுக்கு வழங்கபட்ட ஆவணங்களில் கையால் எழுதி, திருத்தப்பட்டுள்ளதால், தங்களுக்கு வழங்கிய ஆவணங்களை தடய அறிவியல் துறை ஆய்வுக்கு அனுப்பி அந்த ஆவணங்களின் உண்மை தன்மையை ஆராய உத்தரவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும், வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி தாக்கல் செய்த மனுவில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்து இன்று உத்தரவு பிறப்பிக்க உள்ள நிலையில், வழக்கில் மீண்டும் தங்கள் தரப்பு வாதங்களை முன் வைக்க அனுமதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி அல்லி, இவ்விரு மனுக்களுக்கும் பதிலளிக்கும்படி, அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 18ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.












Click it and Unblock the Notifications