"கூனிக்குறுகி நிற்க முடியாது".. திமுகவில் இணைந்த பாமக நிர்வாகிகள்.. பின்னணியை உடைத்த செந்தில்குமார்!
சென்னை: பாமகவின் மூத்த நிர்வாகிகள் பலர் திமுகவில் இணைந்தது ஏன் என்று திமுக எம்பி செந்தில்குமார் தெரிவித்துள்ளார். பாமகவில் ஏற்பட்ட சில கசப்பான சம்பவங்கள்தான் நிர்வாகிகள் பலர் திடீரென திமுகவில் இணைய காரணம் என்று செந்தில்குமார் எம்பி தெரிவித்துள்ளார்.
பாமக கட்சி வலுவாக இருக்கும் மாவட்டங்களில் ஒன்றாக தருமபுரியில் இருந்து பல நிர்வாகிகள் திடீரென திமுகவில் இணைந்தனர். பாமக தலைமையை உலுக்கும் வகையில் திடீரென மூத்த நிர்வாகிகள் பலர் திமுக பக்கம் வந்தனர்.
திமுக தருமபுரி எம்பி செந்தில்குமாரின் ஏற்பாட்டின் பெயரில் இவர்கள் மொத்தமாக திமுக பக்கம் வந்துள்ளனர். பல முக்கிய நிர்வாகிகள் திமுகவில் இணைந்த காரணத்தால் தருமபுரி பாமக கொஞ்சம் ஆட்டம் கண்டுள்ளது.
|
யார் இணைந்தனர்?
தருமபுரி கிழக்கு மாவட்ட முன்னாள் செயலாளர் அ.சத்தியமூர்த்தி தலைமையில் பா.ம.க.வைச் சேர்ந்த நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். பாப்பிரெட்டிப்பட்டி வடக்கு ஒன்றியச் செயலாளரும் - ஒன்றிய கவுன்சிலருமான பெ.விஜயன், பாப்பிரெட்டிப்பட்டி கிழக்கு ஒன்றியச் செயலாளர் சி.வெங்கடேசன், பாப்பிரெட்டிப்பட்டி பேரூர் தலைவர் ராஜிகண்ணு, அரூர் பேரூர்ச் செயலாளர் கி.அய்யப்பன், அரூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் பி. அன்பழகன், பாப்பிரெட்டிப்பட்டி பேரூர்ச் செயலாளர் சபரி, லட்சுமணன் ஆகியோர் திமுகவில் இணைந்தனர்.

எத்தனை பேர்
திமுக தருமபுரி எம்பி செந்தில்குமாரின் ஏற்பாட்டின் பெயரில் இவர்கள் மொத்தமாக திமுக பக்கம் வந்துள்ளனர். அதோடு பா.ம.க.வைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்ட மாவட்ட, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம் ஆனார்கள். இந்த நிலையில் பாமக நிர்வாகிகள் இப்படி திடீரென திமுகவில் இணைந்தது ஏன் என்று செந்தில்குமார் எம்பி ட்வீட் செய்துள்ளார். அதில், பாமக கட்சி #தோழர்களிடமே ஆதிக்க_நிலையை கடைபிடிக்கும் அன்புமணி அவர்கள். கட்சிக்குள் சமூகநீதி என்றால் என்ன?- என்ற நிலைதான் காணப்படுகிறது.

அன்புமணி
அன்புமணி அவர்களுக்கும் பாமக கட்சி தொண்டர்களுக்கும் எட்டமுடியாத இடைவெளியை அவரே உருவாக்கியது தான் தோழர்களின் மன வருத்ததிற்கான மிக முக்கியமான காரணம் என்று ட்வீட் செய்துள்ளார். அதோடு செய்தியாளர்களிடம் பேசிய வீடியோ ஒன்றையும் செந்தில்குமார் ட்வீட் செய்துள்ளார். அதில், செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் பாமக நிர்வாகிகளும்,எம்பி செந்தில்குமாரும், பாமகவில் சமூக நீதி இல்லை.

அடிமை
வன்னியர்களுக்கு பாதுகாப்பான கட்சி பாமக கிடையாது. பாமகவில் இருந்தால் நல்ல உடை கூட உடுத்த முடியாது. நேர்மையாக, தூய்மையாக இருப்பவர்களுக்கு அங்கே வேலை கிடையாது. தலைமைக்கு கூஜா தூக்குபவர்களுக்கு மட்டுமே அங்கே வேலை கிடைக்கும். சமீபத்தில் கூட அன்புமணி மகள் திருமண மேடையில் கட்சியினர் அனுமதிக்கப்படவில்லை. மேடையில் நிர்வாகிகளை அனுமதிக்காமல் தடுப்பு போட்டு இருந்தனர்.

சமூக நீதி
நாம் சமூக நீதி பேசுகிறோம். ஆனால் பாமக கட்சிக்கு உள்ளேயே இதுதான் ஆதிக்க நிலை. கட்சி நிர்வாகிக்கு கூட சம உரிமை கொடுக்காமல் இருந்தனர். அவர்களே மேலே இருப்பார்களாம். நாங்கள் கீழே இருந்து பார்க்கக் வேண்டுமாம்? அவர்கள் இரண்டு வாரம் செலவு செய்து திருமணம் செய்கிறார்கள். நிர்வாகிகள் எல்லாம் வறுமையில் இருக்கிறார்கள். இதுதான் நிலை. அவர்கள் முன்னிலையில் நாங்கள் கூனிக்குறுகி நிற்க முடியாது.. அன்புமணியிடம் கூனிக்குறுகி இருக்க முடியாது. அதனால் வெளியேறிவிட்டோம், என்று செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் பாமக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications