நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தர் மீது பண மோசடி வழக்கு.. மத்திய குற்றப்பிரிவில் விசாரணைக்கு ஆஜர்
சென்னை: சின்னத்திரை நடிகை மகாலட்சுமியின் கணவரும், தயாரிப்பாளருமான ரவீந்தர் சந்திரசேகரன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பண மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர். அமெரிக்க வாழ் இந்தியரான விஜய் என்பவர் ஆன்லைன் வாயிலாக அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்ற பிரிவில் ரவீந்தர் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.
தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவர் ரவீந்தர் சந்திரசேகர். லிப்ரா புரொடக்ஷன் என்ற நிறுவனம் மூலம் திரைப்படங்களைத் தயாரித்து வருகிறார். இவர் கடந்தாண்டு சீரியல் நடிகை மகாலட்சுமியை திடீரென திருமணம் செய்து கொண்டதை அடுத்து சமூக வலைத்தளங்களில் பிரபலமானார். தனது மனைவியோடு இவர் தினசரியும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த விஜய் என்பவரிடம் தயாரிப்பாளர் ரவீந்தர் கடந்த ஆண்டு மே மாதம் 8ஆம் தேதி, நடிகர் ஒருவருக்கு அட்வான்ஸ் என 20 லட்சம் ரூபாய் பணம் கேட்டுள்ளார். இதற்கு அமெரிக்காவைச் சேர்ந்த விஜய், என்னிடம் 20 லட்சம் இல்லை 15 லட்சம் தான் இருக்கிறது. அதை தான் இரண்டு தவணையாக அனுப்புவதாக கூறி முதலில் 10 லட்சமும், அடுத்த நாள் 5 லட்சம் பணத்தை ரவீந்தர் வங்கி கணக்கிற்கு அனுப்பி உள்ளார்.
விஜய்யிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்ட ரவீந்தர், பணத்தை 16 லட்சமாக ஒரே வாரத்தில் திருப்பிக் கொடுத்துவிடுவதாக கூறியுள்ளார். ஆனால், ரவீந்தர் சொன்னபடி பணத்தை தராமல் இழுத்தடித்துள்ளார். ரவீந்தரிடம் பணம் விஷயமாக கேட்டதற்கு, வங்கி விடுமுறை என்றும், செக் அனுப்பிருக்கேன் என்றும் இழுத்தடித்த ரவீந்தர் ஒரு கட்டத்தில் விஜய்யின் செல்போன் நம்பரை பிளாக் செய்து விட்டாராம்.
இதனால் விஜய்யின் மனைவி, ரவீந்திரனை தொடர்பு பணத்தை கேட்டபோது, அவரை தகாதவார்த்தையால் திட்டியதாக தெரிகிறது. இதனால், ஆத்திரம் அடைந்த விஜய் ஆன்லைன் மூலம் அமெரிக்காவிலிருந்து ரவீந்திரன் பணம் கேட்டதற்கான ஆதாரம், அவர் பணம் கேட்டு பேசி ஆடியோ போன்றவற்றை வைத்து சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலத்திற்கு புகார் அனுப்பியுள்ளார்.
இந்த புகார் குறித்து ரவீந்தரிடம் கேட்டபோது, தான் விஜய்யிடம் இருந்து 15 லட்சம் வாங்கியது உண்மை தான் என்றும்,ஆனால் இந்த பணத்தினை வெளிநாட்டிலிருந்து இங்கு கொண்டுவருவதற்கு முடியாமல் விஜய் தன்னிடம் கொடுத்து வைத்ததாகவும்,விஜய்யின் உறவினர்கள் வந்தால் பணத்தை கொடுத்து விடுவதாகவும் தெரிவித்தாராம்.
இதனிடையே வெளிநாடு வாழ் இந்தியர் விஜய் அளித்த புகாரை தொடர்ந்து ரவீந்தர் சந்திரசேகரன் மீது போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்ற பிரிவில் ரவீந்தர் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications