11ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி! அசத்தி காட்டிய திருவள்ளூர் சேவாலயா பள்ளி மாணவர்கள்
சென்னை: 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில் திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் அருகே, கசுவா கிராமத்தில் அமைந்துள்ள சேவாலயா மகாகவி பாரதியார் மேல்நிலை பள்ளி 100% தேர்ச்சியை கொடுத்திருக்கிறது.
இது குறித்து பள்ளி விடுத்துள்ள அறிக்கையில், "மே.16ம் தேதி வெளியான 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில், சேவாலயாவின் மகாகவி பாரதியார் மேல்நிலை பள்ளி மாணவர்கள் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய 164 மாணவர்களில் 106 மாணவர்கள் முதல் பிரிவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்கள் 86.5%, 85.5% மற்றும் 85% மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் அருகே, கசுவா கிராமத்தில் அமைந்துள்ள சேவாலயா தொண்டு நிறுவனம் 37 ஆண்டுகளாக இலவசக் கல்வி அளித்து வருகிறது. இப்பள்ளியில் ஏறத்தாழ 2,200 ஏழை மாணவர்கள் படித்து வருகின்றனர். பல மாணவர்கள் முதல் தலைமுறை பள்ளி செல்வோர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
600 க்கு 519 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை சாதனா பி பெற்றுள்ளார். இவர் தந்தை ஓட்டுநராகவும் தாயார் இல்லத்தரசியாகவும் உள்ளனர். பிளஸ் 2 முடித்த பிறகு மருத்துவம் படிக்க விருப்பம் உள்ளதாகக் கூறுகிறார்.
513 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடம் பெற்ற கீதாலட்சுமி கே, பொறியியல் படித்து செயற்கை நுண்ணறிவுத் துறையில் பணியாற்ற விரும்புவதாகக் கூறினார். அவர் தந்தை வெல்டராக பணிபுரிகிறார். தாயார் இல்லத்தரசி ஆவார்.
508 மதிப்பெண் பெற்று வணிகவியல் பிரிவைச் சேர்ந்த மோகன்பாபு ஆர் மற்றும் காவியா எஸ் ஆகியோர் மூன்றாம் இடம் பிடித்துள்ளனர். மோகன்பாபுவின் தந்தை ஓட்டுநராக பணிபுரிகிறார். தாயார் இல்லத்தரசி ஆவார். அவர் வணிகவியலில் மேற்படிப்பு முடித்து, காவல்துறையில் பணிபுரிய விரும்புவதாகக் கூறுகிறார். காவியாவின் தந்தை சேவாலயாவில் ஓட்டுநராக பணிபுரிகிறார். அவர் தாயார் இல்லத்தரசி ஆவார். அவரது சகோதரர் சேவாலயாவின் உதவியுடன் பொறியியல் மேற்படிப்பு படித்து வருகிறார். காவியா பள்ளிப்படிப்பிற்குப்பின் ஐ ஏ எஸ் ஆவதே தனது லட்சியம் என்று கூறுகிறார்.
மாணவர்கள் அனைவரும் தங்கள் வெற்றிக்கு காரணம் தங்கள் ஆசிரியர்களும், சேவாலயா பள்ளி என்றும் கூறி நன்றி தெரிவித்தனர். வாழ்வில் வெற்றி பெற்று, சேவாலயாவிற்கும் இந்த சமுதாயத்திற்கும் உதவி செய்வோம் என்றும் கூறினர்.
பொதுத் தேர்வுகளை முன்னிட்டு சேவாலயா ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பாடங்களில் மட்டுமல்லாமல் உடல் மற்றும் மனதளவிலும் சிறந்த வழிகாட்டுதலை வழங்கி உதவினர். சிறப்பு வகுப்புகள் நடத்தி, தனிப்பட்ட கவனம் செலுத்தி மாணவர்களை சிறப்பான முறையில் அவர்கள் தேர்வுகளுக்கு தயார்படுத்தினர்.
உயர் கல்வியில் சரியான துறையைத் தேர்ந்தெடுப்பதற்கான வழிகாட்டும் நிகழ்வுகளை மாணவர்களுக்காக ஏற்பாடு செய்து, வசதி குறைந்த மாணவர்களுக்கு உயர் கல்வி செலவுகளிலும் சேவாலயா உதவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
1988 முதல் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் சேவாலயா, தென்னிந்தியா முழுவதும் 50 மையங்கள் மூலம், ஏழை எளிய குழந்தைகளுக்கு இலவசக் கல்வி, கிராம இளைஞர்களுக்கான தொழிற்கல்வி, ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர் இல்லங்கள், மருத்துவமனைகள், சுகாதாரம் மற்றும் கிராம வளர்ச்சித் திட்டங்கள், கோசாலைகள் மற்றும் இயற்கை விவசாயம் ஆகிய துறைகளில் இலவச சேவை செய்து வருகிறது. 37 ஆண்டுகளில் 10 லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகளின் வாழ்க்கை முன்னேற்றத்தில் பங்காற்றியுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications