பாலியல் புகார் வழக்கு; விசாரணையை தாமதப்படுத்த முன்னாள் சிறப்பு டிஜிபி முயற்சி - அரசு குற்றச்சாட்டு
பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பான வழக்கு விசாரணையை முன்னாள் சிறப்பு டிஜிபி வேண்டுமென்றே தாமதப்படுத்த தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருவதாக தமிழக அரசு குற்றம் சாட்டியுள்ளது.
சென்னை:பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பான விசாரணையை தாமதப்படுத்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட முன்னாள் சிறப்பு டிஜிபி தொடர்ந்து முயற்சி செய்வதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு குற்றம் சாட்டியுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் மாவட்ட எஸ்.பி. அந்தஸ்தில் உள்ள பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் முதல்வர் பாதுகாப்புப் பணியில் இருந்துள்ளார். அப்போது சிறப்பு டிஜிபி அந்தஸ்தில் இருந்த ஐபிஎஸ் அதிகாரி, பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இது குறித்து அந்தப் பெண் ஐபிஎஸ் அதிகாரி தமிழக சட்டம் ஒழுங்கு காவல்துறை டிஜிபி திரிபாதியிடமும், உள்துறைச் செயலரிடமும் புகார் அளித்தார்.
பொள்ளாச்சி பலாத்கார வழக்கு.. கைதானவர்களுக்கு சாலையோரம் கொடுத்த 'சலுகை..' 7 போலீசார் அதிரடி சஸ்பெண்ட்
பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்ததாக தமிழக சட்டம் - ஒழுங்கு சிறப்பு டிஜிபி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார்.
அரசுக்கு அறிக்கை
முன்னாள் சிறப்பு டிஜிபி மீதான புகார் குறித்து விசாரிக்க, பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் தடுப்பு சட்டப்படி, கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் ஐந்து பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இந்த குழு விசாரணையை முடித்து கடந்த ஏப்ரலில் அரசுக்கு அறிக்கை அளித்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் முன்னாள் சிறப்பு டிஜிபிக்கு எதிராக குற்ற குறிப்பாணையும் வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் சிறப்பு டிஜிபி குற்றச்சாட்டு
இந்நிலையில் விசாகா குழு விசாரணை நடவடிக்கைகளை ரத்து செய்யக் கோரி சஸ்பெண்ட் செய்யப்பட்டமுன்னாள் சிறப்பு டிஜிபி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், விசாரணை குழுவில் இடம் பெற்றுள்ள கூடுதல் டிஜிபி சீமா அகர்வால், ஐ ஜி அருண் ஆகியோர் தனக்கு எதிராக ஒருதலைபட்சமாக செயல்படுவர் என்பதால் இருவரையும் நீக்க கோரி உள்துறை செயலருக்கு மனு அளித்ததாகவும், இந்த மனு பரிசீலிக்கப்படும் முன்பே விசாரணை துவங்கி விட்டதாகவும் முன்னாள் சிறப்பு டிஜிபி குற்றம் சாட்டியுள்ளார்.
பாலியல் தொல்லை தடுப்புச் சட்டம்
சாட்சிகள் பலர், புகாரளித்த பெண் ஐ பி எஸ் அதிகாரிக்கு கீழ் பணியாற்றுபவர்கள் என்பதால், அவரை இடமாற்றம் செய்யக் கோரியும், அது ஏற்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார். பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை தடுப்பு சட்டப்படி இயற்கை நீதியை பின்பற்றி முறையாக விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.
விசாகா கமிட்டி விசாரணை அறிக்கை
இந்த மனு நீதிபதி சரவணன் முன்பு சில தினங்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் சிறப்பு டிஜிபி தரப்பில் விசாகா கமிட்டி விசாரணை முடிந்த 10 நாட்களில் சம்பந்தப்பட்டவர்களுக்கு அதன் அறிக்கையை வழங்க வேண்டும். ஆனால் இதுவரை தனக்கு வழக்கப்படவில்லை. குழுவை மாற்றியமைக்கும் கோரிக்கையும் பரிசீலிக்கபடவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. பின்னர் இந்த வழக்கு குறித்து அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்ட நீதிபதி வழக்கு விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
பாரபட்சமான விசாரணை
இந்த மனு நீதிபதி சரவணன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, முன்னாள் சிறப்பு டிஜிபி தரப்பில் விசாகா கமிட்டி விசாரணையில் சாட்சிகளின் வாக்குமூல அறிக்கையை தனக்கு தரப்படவில்லை என்றும், பாரபட்சமான விசாரணை நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தமிழக அரசு பதில்
இதற்கு, பதிலளித்த அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், ஏற்கனவே இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரி முன்னாள் சிறப்பு டிஜிபி தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் நிராகரித்து விட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.
தமிழக அரசு பதில் தர உத்தரவு
கமிட்டியில் உள்ள அருண் என்ற அதிகாரி மாற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். வேண்டுமென்றே தனக்கு எதிரான விசாரணையை தாமதப்படுத்த தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். இந்த வழக்கில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி சரவணன், விசாகா கமிட்டி விசாரணையின் ஏற்கனவே உள்ள நிலை நீடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, இரண்டு வாரத்திற்குள் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார்.