ஆசிரியர் மீது பாலியல் புகார்.. சென்னையில் உள்ள மேலும் ஒரு பிரபல பள்ளிக்கு நோட்டீஸ்
சென்னை: ஆசிரியர் மீதான பாலியல் புகார் தொடர்பாக சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளிக்கு பள்ளிகல்வித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
பத்மா சேஷாத்ரி பாலபவன் பள்ளி ஆசிரியர் ராஜகோபால் மீது மாணவி ஒருவர் அளித்த புகார் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதையடுத்து பல்வேறு பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவிகளிடம் நடத்திய அத்துமீறல்கள் குறித்து புகார்கள் வரத் தொடங்கி உள்ளன.
குறிப்பாக சென்னையில் உள்ள பிரபலமான பள்ளிகளின் ஆசிரியர்கள் மீது தான் இத்தகைய புகார்கள் அதிக அளவில் எழத்தொடங்கி உள்ளன,. இந்த விவகாரத்தில் அரசியல கட்சி தலைவர்கள் கருத்து தெரிவிக்க தொடங்கியதால் ஊடகங்களில் தலைப்பு செய்திகளாக மாறி உள்ளன.
நோட்டீஸ்
சென்னையின் பிரபல பள்ளிகளில் ஒன்றான புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் மீது முன்னாள் மாணவிகள் பாலியல் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக ஊடகங்களில் செய்திகளும் வெளியாகின, இதையடுத்து அந்த பள்ளியின் தாளாளருக்கு தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அந்த நோட்டீஸில கூறப்பட்டுள்ள விவரங்களை இப்போது பார்ப்போம்.
மாணவிகள் புகார்
29.5.2021 அன்று வெளியான பத்திரிக்கை செய்தியில் செனாய் நகர் புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் மீது அப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவிகள் தெரிவித்துள்ள பாலியல் குற்றச்சாட்டு குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளும் பொருட்டு பள்ளியின் தாளாளர்/முதல்வர் மற்றும் சம்பந்தப்பட்ட ஆசிரியர் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் நேரில் ஆஜராக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதன்மை கல்வி அலுவலர்
எனவே பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவிகள் தெரிவித்துள் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆசிரியர் பெயர் மற்றும் அன்னார் மீது பள்ளி நிர்வாகம் எடுத்துள்ள நடவடிக்கை விவரம் மற்றும் அவ்வாசிரியர் மீது இதற்கு முன்பு மாணவிகளிடமிருந்து புகார் ஏதேம் பெறப்பட்டு பள்ளி நிர்வாகத்தால் சம்மந்தப்பட்ட ஆசிரியர் மீது ஏதேனும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்ற விவரத்தினை இச்செயல்முறை மூலம் கிடைக்கப்பெற்ற அன்றே இவ்வலுவலகம் சமர்பித்திட பள்ளியின் தாளாளர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்" இவ்வாறு சென்னை முதன்மை கல்வி அலுவலர் தனது நோட்டீஸில் கூறியுள்ளார்.
மகரிஷி வித்யா மந்திர் பள்ளி
சென்னை அயனவாரத்தில் உள்ள மகரிஷி வித்யா மந்திர் பள்ளியிலும் ஒரு ஆசிரியர் மீது பாலியல் புகார் எழுந்தத. முன்னாள் மாணவிகள் அளித்த புகாரினை ஏற்று ஆனந்தன் என்ற ஆசிரியரை பள்ளி நிர்வாகம் ஏற்று சஸ்பெண்ட் செய்தது. அவர் மீது காவல்துறையில் புகார் அளிக்க உள்ளதாக அறிக்கையும் அந்த பள்ளி வெளியிட்டிருந்தது. தொடர்ந்து மாணவிகள் புகார் எழுப்பி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.