‛மாணவிக்கு பாலியல் தொல்லை’.. கலாஷேத்ரா மாஜி நடன ஆசிரியர் கைது! 15 ஆண்டுக்கு பின் சிக்கியது எப்படி?
சென்னை: சென்னை கலாஷேத்ரா நாட்டிய கல்லூரியில் 15 ஆண்டுகளுக்கு முன்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாஜி நடன ஆசிரியரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா நாட்டிய கல்லூரி செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் கலாச்சாரத்துறையின் கட்டுப்பாட்டில் இந்த கல்லூரி என்பது இயங்கி வருகிறது.

இந்நிலையில் தான் கடந்த ஆண்டு கலாஷேத்ரா கல்லூரியில் பெரும் போராட்டம் வெடித்தது. மாணவிகள் திடீரென்று உள்ளிறுப்பு போராட்டத்தை தொடங்கினர்.
அதாவது பேராசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாணவிகள் போராட்டத்தை தொடர்ந்தனர். இந்த பிரச்சனை பூதாகரமாக வெடித்தது. இதையடுத்து விசாரணை நடத்திய அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் உதவி பேராசிரியர் ஹரிபத்மன் மீது வழக்குப்பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து தற்போது முன்னாள் நடன ஆசிரியரை அடையாறு அனைத்து மகளிர் போலீசார் கைது செய்துள்ளனர். இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது கலாஷேத்ரா கல்லூரியில் பயின்ற மாணவி ஒருவர் தற்போது வெளிநாட்டில் உள்ளார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை காவல் ஆணையரக அலுவலகத்தில் முன்னாள் பேராசிரியர் ஸ்ரீஜித் மீது ஆன்லைனில் பாலியல் புகார் செய்தார்.
இந்த புகார் பற்றி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி சென்னை காவல் ஆணையரக அலுவலகம் திருவான்மியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு உத்தரவிட்டது. இதையடுத்து திருவான்மியூர் மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது புகார் அளித்தவர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராகி போலீசாரிடம் விளக்கம் அளித்தார். அதேபோல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஸ்ரீஜித்தும் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்து இருந்தார்.
இருதரப்பும் கூறியதை கேட்ட போலீசார் 15 ஆண்டுக்கு முன்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறி கலாஷேத்ரா முன்னாள் நடன ஆசிரியர் ஸ்ரீஜித்தை கைது செய்துள்ளனர். இவர் தற்போது தனியாக நடன பள்ளி அமைத்து வரும் நிலையில் போலீசாரிடம் சிக்கி உள்ளார். ஏற்கனவே கடந்த ஆண்டு கலாஷேத்ரா விவகாரம் பூதாகரமான நிலையில் இப்போது முன்னாள் பேராசிரியர் ஸ்ரீஜித் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications