ஆடு நனையுதுன்னு ஓநாய் அழுவதா.. பாஜகவை பார்த்து கல்லூரி மாணவர் கேள்வி.. ஒன்இந்தியா நிகழ்ச்சியில் பரபர
சென்னை: "சிறுபான்மையினருக்கு உதவி செய்கிறோம் என்று கூறி நம்பிக்கை துரோகம் செய்வது திமுக, நட்பாக இருப்பது பாஜக" என பாஜக நிர்வாகி ஸ்ரீகாந்த் ஒன் இந்தியா Gen Z Talks கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசியதற்கு மாணவர் ஒருவர் "இது ஆடு நனைகிறதே என ஓநாய் அழுத கதையாக இருக்கிறது" எனத் தெரிவித்தார்.
நமது ஒன் இந்தியா தமிழ் சார்பில், அரசியல் பிரமுகர்களுடன், கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. 'நீதி பரவட்டும்' என்ற பெயரிலான Gen Z மாணவர்களுடனான அரசியல் கலந்துரையாடலில் பாஜகவின் ஸ்ரீகாந்த் கருணேஷ், அதிமுகவின் கோவை சத்யன், திமுகவின் சரவணன் அண்ணாதுரை, காங்கிரஸ் கட்சியின் அலிம் அல்புஹாரி ஆகியோர் பங்குபெற்றனர்.

இந்த நிகழ்வில் சட்டக் கல்லூரி மாணவர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த பாஜகவின் ஸ்ரீகாந்த் கருணேஷ், "சிறுபான்மையினருக்கு உதவி செய்கிறோம் என்று கூறி நம்பிக்கை துரோகம் செய்வது திமுக, நட்பாக இருப்பது பாஜக" என்றார். அதற்கு அந்த மாணவர் "இது ஆடு நனைகிறதே என ஓநாய் அழுத கதையாக இருக்கிறது" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அந்த மாணவர், "இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை என்ற கருத்துக்கு பெயர் பெற்றது. இன்றைக்கு உணவின் பெயரால் அடித்துக் கொல்லும் நிலையை கண் முன்னே பார்க்கிறோம். ஒரு உணவை ஒரு தரப்பு கடுமையாக எதிர்த்து வருகிறது, அடித்துக் கொல்கிறது அதே உணவை ஏற்றுமதி செய்வதில் அரசு முன்னோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. இதை எப்படிப் புரிந்து கொள்வது?" எனக் கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து பேசிய திமுக வழக்கறிஞர் சரவணன் அண்ணாதுரை, "இந்து ராஷ்டிரம் என்கிறார்கள். மக்களை துண்டாட நினைப்பது யார்? கும்பல் படுகொலை எதனால் நடக்கிறது? மாட்டுக்கறி வைத்திருக்கிறார்கள் என்று சொல்லி இஸ்லாமியர்களை படுகொலை செய்யும் அவலம் தமிழ்நாட்டில் நடக்கிறதா? பாஜக ஆளும் மாநிலங்களில் தான் நடக்கிறது" எனத் தெரிவித்தார்.
பாஜக நிர்வாகி ஸ்ரீகாந்த் பேசுகையில், "எங்கோ நடக்கிற ஒற்றைச் சம்பவத்தை ஒட்டுமொத்த நாட்டுக்கான உதாரணமாகச் சொல்லவேண்டாம். இங்கு பாலியல் வன்கொடுமைகள் நடக்கின்றன. காவல்துறை மரணங்கள் நடக்கின்றன. அதைப் பற்றி பேசலாம்" எனக் கூறினார்.












Click it and Unblock the Notifications