அதெப்படி திமிங்கலம்.. இரு வாக்குச்சாவடியில் வாக்களித்த ஒரே நபர்! எஸ்ஐஆரைத் தாண்டியும் எப்படி? ஷாக்!
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரே நபர் இரண்டு வாக்குகள் அளித்த சம்பவத்தால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. பொட்டவெளி பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் திருஇந்தளூர் நகராட்சி பள்ளியில் வாக்கு செலுத்தியதாக தெரிவித்துள்ளனர். அதே நபர் பொட்டவெளி வாக்குச்சாவடியிலும் வாக்களித்ததாக தகவல் வெளியான நிலையில், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில், இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மயிலாடுதுறை சட்டப் பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட திருஇந்தளூர் ஊராட்சி பொட்டவெளியில் உள்ள வாக்குச்சாவடியில் பணியாற்றிய திமுக பாக முகவர் நேதாஜி என்பவர் தேர்தல் நேர முடிவுக்குப் பின்னர், நகராட்சி பகுதிகளில் எந்த கட்சிக்கு சாதகமாக வாக்குகள் பதிவாகியுள்ளது என்பதை அறிந்து கொள்வதற்காக திருஇந்தளூர் நகராட்சி பள்ளியில் உள்ள பாக முகவர்களை தொடர்பு கொண்டுள்ளார்.

அப்போது, பொட்டவெளி பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் திருஇந்தளூர் நகராட்சி பள்ளியில் வாக்கு செலுத்தியதாக தெரிவித்துள்ளனர். அதே நபர் பொட்டவெளி வாக்குச்சாவடியிலும் இருந்ததை அறிந்த பாக முகவர்கள் உடனடியாக திருஇந்தளூர் நகராட்சி பள்ளிக்கு நேரில் சென்று பார்த்தபோது அங்கும் அவருக்கு வாக்கு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
மயிலாடுதுறை
இதுகுறித்து, அவர் அளித்த புகாரின்பேரில் மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் சிவசெந்தில்குமார் தலைமையிலான போலீஸார் மற்றும் தேர்தல் அதிகாரிகள் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அந்த நபர் தம்புசாமி மகன் ராமையன்(65) என்பதும், அவருக்கு, திருஇந்தளூர் ஊராட்சி பொட்டவெளியில் உள்ள 113-வது பாக எண்ணில் 288 வரிசை எண்ணில் என்சிசி0031682 வாக்காளர் அடையாள அட்டை எண்ணிலும், திருஇந்தளூர் நகராட்சி பள்ளியில் பாகம் எண் 140, வரிசை எண் 898ல் என்சிசி 1545201 என்ற வாக்காளர் அடையாள அட்டையிலும் இருவேறு வாக்குகள் இருப்பது தெரியவந்தது.
தேர்தல் முறைகேடு
இதுகுறித்து, பொட்டவெளி வாக்குச்சாவடி பாக முகவர்கள் நேதாஜி (திமுக), தினேஷ்குமார் (நா.த.க.), சிரஞ்சீவி (த.வெ.க) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் மனோன்ராஜ் ஆகியோர் ஒரே நபர் இரண்டு வாக்காளர் அடையாள அட்டைகளை கொண்டு எப்படி வாக்கு செலுத்த முடியும்? எஸ்.ஐ.ஆர் பணிகள் மேற்கொண்டும் இதுபோன்ற தவறுகள் எப்படி நடைபெற்றது? இதுசம்பந்தமாக இரண்டு வாக்குகளை பதிவு செய்த ராமையன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாக்காளர் அடையாள அட்டை
இரண்டு வாக்காளர் அடையாள அட்டையை வழங்கிய தேர்தல் ஆணையம் இதற்கு பதில் கூற வேண்டும் என தேர்தல் மண்டல அலுவலர் திவாகரிடம் தனித்தனியே புகார் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட தேர்தல் அலுவலர்கள் இதுகுறித்து தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனையடுத்து, அதிகாலை 4 மணியளவில் வாக்கு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
வாக்களிக்கும்போது வீடியோ
இதேபோல், மயிலாடுதுறை குளிச்சார் பகுதியை சேர்ந்த கு.பாலாஜி என்பவர் வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கும்போது வீடியோ எடுத்து எந்த கட்சிக்கு வாக்களித்தார் என்பதை தேர்தல் ஆணையத்தின் விதிமுறைக்கு எதிராக சமூக வலைதளங்களில் பரப்பியதாக அந்த வாக்குச்சாவடி பாக முகவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications