சென்னை பாரிமுனை பார்சலில் திகில்! மண்டை ஓடு அனுப்பிய 3 பேர் கைது! விசாரணையில் பகீர்!
சென்னை: சென்னை பாரிமுனையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் பெண் ஒருவருக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கொடுத்தனுப்பிய பார்சலில் மனித மண்டை ஓடு மற்றும் எலும்புகள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வியாசர்பாடி, ராஜாஜி தெருவை சேர்ந்தவர் ஸ்ருதி (29). இவர் பாரிமுனை அரண்மனைக்காரன் தெருவில் உள்ள ஒரு தனியார் டூல்ஸ் விற்பனை நிறுவனத்தில் அக்கவுன்ட்டன்ட்டாக பணியாற்றி வருகிறார்.

நேற்று முன் தினம் மாலை கடைக்கு யாரோ அடையாளம் தெரியாத நபர் வந்தாராம். அப்போது அங்கிருந்த பாதுகாப்பு காவலர் கிருஷ்ணலால் என்பவரிடம், ஸ்ருதியின் பெயரை சொல்லி அவருக்கு ஒரு பார்சல் வந்திருப்பதாகவும் அதை அவரிடம் கொடுத்துவிடுங்கள் என்றும் சொல்லிவிட்டு சென்றாராம்.
இதையடுத்து காவலாளி அந்த பார்சலை உள்ளே கொண்டு போய் ஸ்ருதியிடம் கொடுத்தாராம். அப்போது ஸ்ருதி , " நான் எந்த பொருளையும் ஆர்டர் செய்யவில்லை. இது எனக்கு வந்திருக்காது" என்றாராம்.
இதனால் அந்த காவலாளி, சந்தேகமடைந்து அவரே அந்த பார்சலை பிரித்து பார்த்தாராம். அதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார். அந்த பார்சலில் ஒரு மனித மண்டை ஓடு , மூன்று எலும்புத் துண்டுகள், ஒரு விபூதி பொட்டலம் ஆகியவை இருந்ததை கண்டு அதிர்ந்தார்.
உடனே அருகில் இருந்த எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் அந்த மண்டை ஓட்டை கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கடையை சுற்றியுள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர்.
இதையடுத்து அந்த பார்சல் கொடுத்த நபரை தேடி வந்தனர். மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் பட்டபகலில் இப்படி ஒரு பார்சலை கொடுத்துச் சென்றது யார் என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அந்த மண்டை ஓட்டை அனுப்பியது ஓட்டேரியை சேர்ந்த தினேஷ் (37) என தெரியவந்தது. அவரது குடும்பத்தினருக்கும் ஸ்ருதியின் குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருப்பதாகவும், இதனால் ஸ்ருதியை பயமுறுத்த மனித மண்டை ஓட்டை அனுப்பியதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையடுத்து தினேஷை கைது செய்த போலீஸார், அவரது கூட்டாளிகளான சிந்தாதிரிபேட்டையைச் சேர்ந்த ஜோசப் (60), சீனிவாசன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications