உடம்பே நடுங்குதே.. சென்னை சாலையில்.. புயலுக்கு இடையே அசால்ட்டாக நகர்ந்து போன முதலை.. ஷாக் வீடியோ
சென்னை: சென்னை சாலையில் முதலை ஒன்று வேகமாக ஓடும் வீடியோ வெளியாகி உள்ளது. புயலுக்கு இடையே முதலை இப்படி சாலையில் செல்வதால் மக்கள் இடையே பீதி ஏற்பட்டு உள்ளது.
மிக்ஜாம் புயல் கரையை நெருங்கி வரும் நிலையில், சென்னை முழுவதும் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. நேற்றிரவு முதல் பெய்த தொடர் மழையின் காரணமாக பெரும்பாலான சாலைகளில் வெள்ளம் ஏற்பட்டு உள்ளது.

கனமழை காரணமாக சென்னையில் பல சாலைகள் நீரில் மூழ்கி உள்ளன. அதோடு பல பகுதிகளில் மின்சாரம் அப்படியே தடை பட்டுள்ளது.
முதலை: விடிய விடிய கொட்டித் தீர்த்து வரும் மழைக்கு நடுவே, பெருங்களத்தூர் - நெடுங்குன்றம் சாலையில் உள்ள வேலம்மாள் பள்ளி அருகில் முதலை ஒன்று சாலையை கடக்கும் காட்சி வெளியாகி உள்ளது. இது உண்மையான வீடியோ என்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
சாலையில் ஒரு பக்கத்தில் இருந்து இன்னொரு பக்கம் உள்ள பகுதிக்கு முதலை சென்றுள்ளது. மக்கள் அங்கே பைக்கில் செல்லும் நேரத்தில் அசால்ட்டாக இந்த முதலை கடந்து உள்ளது. அப்போது அங்கே ஒரு வாகன ஓட்டி செல்வதும் படம் பிடிக்கப்பட்டு உள்ளது. இதை நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர். அந்த முதலை அருகே இருக்கும் ஏரி பகுதிகளில் இருந்து வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
செம்பரம்பாக்கம் ஏரி நீர்: செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 8,409 கன அடியாக உயர்ந்து உள்ளது. நேற்று இரவு 8 மணிக்கு 4,242 கன அடியாக இருந்த நீர்வரத்து, இரவு முழுவதும் பெய்த கன மழையால் 8,409 கன அடியாக அதிகரித்துள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21.15 அடியாக உள்ளது (மொத்தம் 24 அடி). ஏரியில் இருந்து வினாடிக்கு 3,009 கன அடிக்கு உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் உபரி நீர் வெளியேற்றத்தை அதிகரிக்க வாய்ப்புள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் காலை 4 மணி வரை 12.5 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
Crocodile in Perungalathur 😳 pic.twitter.com/sqNAQ7wyvD
— Ayyappan (@Ayyappan_1504) December 3, 2023
சுரங்க பாதைகள் மூடல்: கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் இதுவரை 14 சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளன. கனமழையின் காரணமாக 15 இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன.
◾️ கணேசபுரம்
◾️ கொங்கு ரெட்டி
◾️ பெரம்பூர்
◾️ வில்லிவாக்கம்
◾️ ரங்கராஜபுரம்
◾️ அரங்கநாதன்
◾️ துரைசாமி ஆகிய முக்கிய சுரங்க பாதைகள் மூடப்பட்டு உள்ளன.
போக்குவரத்து நிறுத்தம்: 'மிக்ஜாம்' புயல் காரணமாக சென்னையில் காலை 8 மணி வரை மின்சார ரயில் சேவை நிறுத்தம் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் பேருந்து சேவை நிறுத்தப்பட்டது.
புயல் எங்கே உள்ளது: வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் 'மிக்ஜாம்' புயல் நேற்று 23.30 மணி அளவில் அதே பகுதிகளில் புதுச்சேரிக்கு கிழக்கு- வடகிழக்கே சுமார் 210 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்கு கிழக்கு- தென்கிழக்கே சுமார் 150 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 04-12-2023 முற்பகல் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவக்கூடும். பிறகு தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளை ஒட்டி வடக்கு திசையில் நகர்ந்து 05-12- 2023 முற்பகல் தெற்கு ஆந்திரா கடற்கரையை நெல்லூருக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே தீவிர புயலாக கடக்கக்கூடும்.












Click it and Unblock the Notifications