தமிழ்நாடு முழுவதும் நாளை கடையடைப்பு.. கரூர் சம்பவம் எதிரொலியாக வணிகர் சங்கங்களின் பேரவை அறிவிப்பு
சென்னை: கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்தில் 40 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலியாக, உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் நாளை கடைகள் அடைக்கப்படுவதாக தமிழக வணிகர் சங்கங்களின் பேரவை அறிவித்துள்ளது.
கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் நேற்று நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் 40 பேர் உயிரிழந்தனர். மேலும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில், ஆயிரக்கணக்கானோர் கூடிய நிலையில் பின்னால் இருப்பவர்கள் நெருங்கியடித்தபடி பிரச்சாரப் பேருந்தை நோக்கி வந்தனர். இதனால் முன்னால் காத்திருந்தவர்கள் கடுமையான கூட்ட நெரிசலில் சிக்கினர்.

விஜய் பேசிக் கொண்டிருந்தபோதே மூச்சுத் திணறி பலர் அடுத்தடுத்து மயங்கி விழத் தொடங்கினர். மேலும், அப்பகுதியில் இருந்த மரக்கிளை உடைந்து விழுந்ததிலும் சிலர் காயமடைந்தனர். விஜய் பிரச்சாரத்தை முடித்து கிளம்பிய பின்னரே அவர்களை மீட்க முடிந்தது. கரூர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் அறிவித்த முதல்வர் ஸ்டாலின், கரூரில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கரூருக்கு விரைந்து வந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும், பல்வேறு கட்சி தலைவர்கள் தங்கள் வருத்தங்களை பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில், கரூர் துயரச் சம்பவத்தையொட்டி, உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை கடையடைப்பை அறிவித்துள்ளது. நாளை தமிழகம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டிருக்கும் என தமிழக வணிகர் சங்கங்களின் பேரவை அறிவித்துள்ளது.
கரூர் பிரசாரத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாளை (செப்டம்பர் 29) மாநிலம் முழுவதும் கடைகள் அடைக்கப்படும் என தமிழக வணிகர் சங்கங்களின் பேரவை அறிவித்துள்ளது. மாலை 6 மணி வரை கடைகள் அடைக்கப்படும் எனவும் அத்தியாவசிய தேவைகளுக்காக மருந்துக் கடைகள், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் திறந்திருக்கும் என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications