விஜயகாந்த் மீது அவ்வளவு பாசம்.. தமிழகத்தில் பல பகுதிகளில் தானாக கடையடைப்பு.. நெகிழ்ச்சி சம்பவம்!
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், தமிழகத்தின் சில பகுதிகளில் அஞ்சலி செலுத்தும் விதமாகக் கடைகளை அடைத்துள்ளனர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்தார். இதனால் தீவிர அரசியலில் இருந்து சற்று ஒதுங்கி இருந்த அவர், பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதையும் தவிர்த்தே வந்தார்.
கடந்த மாதம் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அங்கே அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

விஜயகாந்த்: இம்மாத தொடக்கத்தில் அவர் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் ஆனார். இதற்கிடையே கடந்த டிசம்பர் 14இல் தேமுதிக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. ரோலிங் சேரில் விஜயகாந்த் அழைத்துவரப்பட்டார். விஜயகாந்த் கடைசியாகக் கலந்து கொண்ட பொது நிகழ்ச்சி அதுதான். அங்கே விஜயகாந்த்தைப் பார்த்த அவரது தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் சோகமடைந்தனர். அந்தளவுக்கு அவரது உடல்நிலை நலிவுற்று இருந்தது.
இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டார். அவருக்கு கொரோனா பாதிப்பும் உறுதியாகி இருந்தது. இருப்பினும், மரணத்தின் போது அவருக்கு கொரோனா பாசிட்டிவாக இல்லை. நுரையீரல் அழற்சி அதாவது pneumonia காரணமாகவே விஜயகாந்த் மரணமடைந்ததாக கூறப்படுகிறது.
நுரையீரல் அழற்சி: நேற்று அதிகாலை நுரையீரல் அழற்சி தீவிரம் அடைந்த நிலையில், அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. கொரோனா, நுரையீரல் பாதிப்பு காரணமாக அவர் உயிரிழந்தார். நேற்று காலை 6 மணியளவில் அவர் காலமானார். அவரது மறைவுக்குத் தமிழகம் முழுவதும் பலரும் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
விஜயகாந்த்தின் உடல் முதலில் அவரது தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. இருப்பினும், அங்கே கூட்டம் அதிகரித்த நிலையில், இன்று காலை சென்னை தீவுத்திடலில் கொண்டு செல்லப்பட்டது. அவரது உடலுக்கு ரசிகர்கள், தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த விஜயகாந்த், தனது நடிப்பால் மக்களின் மனதில் இடம் பிடித்தார்.
இரங்கல்: விஜயகாந்த்தின் மறைவால் அவரது ரசிகர்கள், தொண்டர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். அவர்கள் சென்னை தீவுத்திடலில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். விஜயகாந்த் அவர்களின் மறைவுக்குப் பல அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். திரை பிரபலங்கள் விஜயகாந்த் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
கடையடைப்பு: இதற்கிடையே மயிலாடுதுறை, சீர்காழி, கொள்ளிடத்தில் விஜயகாந்த் மறைவுக்காகக் கடைகள் அடைப்பு செய்துள்ளனர். விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்தச் சீர்காழி உள்ளிட்ட பகுதிகளில் 3,000-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. தஞ்சை ஆடுதுறையில் விஜயகாந்த் மறைவுக்காக இன்று கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாரும் வந்து சொல்லாமல், வலியுறுத்தாமல் அப்பகுதிகளில் உள்ள மக்கள் தானாகக் கடையடைப்பை நடத்தியுள்ளனர். விஜயகாந்த் மீது பொதுமக்கள் எந்தளவுக்கு அன்பையும் மரியாதையையும் வைத்துள்ளனர் என்பதை இது காட்டும் விதமாக இருக்கிறது. விஜயகாந்த் உடல் இன்று மாலை தேமுதிக கட்சி அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்படும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications