சென்னையில் பரபரப்பு! வக்கீல் வீடு மீது துப்பாக்கிச்சூடு? போலீசார் தீவிர விசாரணை!
சென்னை: தாம்பரம் முடிச்சூர் பகுதியில் வழக்கறிஞர் வீட்டின் ஜன்னல் கண்ணாடியை துளைத்துக்கொண்டு துப்பாக்கி குண்டு வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது வீட்டிற்குள் மர்ம நபர் யாரோ துப்பாக்கிச்சூடு நடத்தினரா? என்பது குறித்தும் எப்படி துப்பாக்கி குண்டு வந்தது என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையை அடுத்த தாம்பரம் அருகே முடிச்சூர் பகுதியில் மீனம்மாள் தெருவில் வசித்து வருபவர் வழக்கறிஞர் தியாகராஜன். இந்த நிலையில் இவரது வீட்டில் திடீரென ஒரு சத்தம் கேட்டது. அப்போது வீட்டில் இருந்த தியாகராஜன் மனைவி பிரியா ஓடிச்சென்று பார்த்தார். அப்போது வீட்டின் வரவேற்பு அறை கண்ணாடியை துளைத்துக்கொண்டு துப்பாக்கி குண்டு ஒன்று வீட்டுக்குள் விழுந்து கிடந்தது.

துப்பாக்கி குண்டை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த அவர் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் துப்பாக்கி குண்டை ஆய்வு செய்து பார்த்தனர். இதில், அது சிறிய ரக துப்பாக்கியில் இருந்து வந்த குண்டு என்று தெரியவந்தது.
தொடர்ந்து போலீசார், வழக்கறிஞர் என்பதால், அவருக்கு வழக்கு தொடர்பாக எதிரிகள் யாரும் மிரட்டல் விடுப்பதற்காக இப்படி செய்துள்ளனரா? இல்லை கை தவறி அங்கு குண்டு வந்ததா என்பது குறித்தும் அங்குள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர். தொடர்ந்து தடயவியல் துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர்.
தொடர்ந்து, போலீசார் வழக்கறிஞர் தியாகராஜனின் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, துப்பாக்கி குண்டு சத்தம் கேட்டதும் வெளியே பார்த்த போது, தெருவில் இருந்து மர்ம நபர் ஒருவர் மெயின் ரோடு நோக்கி வேகமாக சென்றதாக அவரது மனைவி பிரியா தெரிவித்தார். இதன் காரணமாக மர்ம நபர் யாரோ, துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடினாரா? என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications