ஆஹா யாரை சொல்றாரு? “கடவுளின் சிறந்த படைப்பு என நினைப்பவர்களுக்கு சிகிச்சை தேவை”: பிரபல பாடகர் நறுக்!
சென்னை: யாரேனும் தங்களை கடவுளின் சிறந்த படைப்பு என்று நினைத்தால், அவரது நோய்க்கு சிகிச்சை தேவை என பிரபல பாடகர் ஸ்ரீனிவாஸ் பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல பாடகர் ஸ்ரீனிவாஸ் தனது இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவில், "யாரேனும் தங்களை கடவுளின் சிறப்புப் படைப்பு என்று நினைத்தால், அவருடைய நோய்க்கு உதவி தேவை என்று அர்த்தம். மனிதாபிமானம் மட்டும் தான் சிறப்பானது. மற்றவை யாவும் முக்கியமானதோ அல்லது சிறப்பு வாய்ந்ததோ அல்ல.

பாடகர் ஸ்ரீனிவாஸ் பதிவு: நான் இங்கு ஒருவரைப் பற்றி பேசவில்லை. இது தங்களுடைய தொழில்களில் வெற்றிகரமான மக்கள் என்று அழைக்கப்படுபவர்களை தாக்கும் ஒரு நோயாகும். அவர்களைக் கவனித்து, முடிந்த உதவிகளை நீங்கள் அவர்களுக்கு செய்யுங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழில் ஏராளமான சூப்பர்ஹிட் பாடல்களை பாடியுள்ளார் பாடகர் ஸ்ரீனிவாஸ். இளையராஜா, தேவா, ஏ.ஆர். ரஹ்மான், வித்யாசாகர் போன்ற இசையமைப்பாளர்களின் இசையில் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் இந்தியிலும் ஏராளமான பாடல்கள் பாடியுள்ளார் ஸ்ரீனிவாஸ். சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இயங்கி வரும் ஸ்ரீனிவாஸ் இன்று தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாடகர் ஸ்ரீனிவாஸின் இன்றைய பதிவு சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி விவாதிக்கப் படுவதற்கு காரணம், பிரதமர் மோடியின் சமீபத்திய பேச்சு தான். பாடகர் ஸ்ரீனிவாஸ் தான் யாரைக் குறிப்பிட்டுச் சொல்கிறேன் என பெயர் குறிப்பிடாமல் பதிவிட்டு இருந்தாலும் அவர் பிரதமர் மோடியை தான் விமர்சித்துள்ளார் என நெட்டிசன்கள் குறிப்பிட்டு விவாதித்து வருகின்றனர்.
பிரதமர் மோடி பேசியது: மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஐந்து கட்டங்களாக 430 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. இன்னும் 2 கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஜூன் 1 ஆம் தேதியுடன் தேர்தல் நிறைவடைந்து, ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. 6, 7 ஆம் கட்ட தேர்தல் நடைபெறும் இடங்களில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, "நான் பயலாஜிகலாக பிறக்கவில்லை என்று நம்புகிறேன். என் தாயார் உயிரோடு இருக்கும்வரை, இந்த உலகிற்கு என் தாய் மூலம்தான் வந்தேன் என நம்பிக் கொண்டிருந்தேன். ஆனால், என் தாயாரின் மரணத்திற்கு பிறகு, நான் பலவற்றை சிந்தித்துப் பார்த்தேன். இப்போது நான் அதை ஏற்றுக்கொள்ளவும் செய்கிறேன். சிலர் இதற்கு எதிராக பேசலாம். ஆனால், நான் இதை முழுமனதாக நம்புகிறேன்.
என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மாதான். பயாலஜிக்கலாக நான் பிறந்திருக்க வாய்ப்பில்லை. நான் மனிதப்பிறவி அல்ல. தான் விரும்பும் ஏதோ ஒரு விஷயத்தை நடத்தியே ஆக வேண்டும் என்பதற்காக, கடவுள் என்னை இந்த பூமிக்கு அனுப்பியிருக்கிறார்" என்று கூறியுள்ளார்.

நெட்டிசன்கள் விவாதம்: பிரதமர் மோடியின் இந்தப் பேச்சுக்கு கடும் விமர்சனம் எழுந்துள்ளது. பிரதமர் மோடியின் பேச்சு பரவி வரும் நிலையில் தான் பாடகர் ஸ்ரீனிவாஸ் அப்படி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இதனால், இரண்டையும் தொடர்புபடுத்தி நெட்டிசன்கள் விவாதித்து வருகின்றனர்.
மேலும், இளையராஜா பேச்சு தொடர்பாக அண்மையில் சர்ச்சை எழுந்த நிலையில், அது தொடர்பாக ஸ்ரீனிவாஸ் இவ்வாறு பதிவிட்டிருப்பதாகவும் நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். பாடகர் ஸ்ரீனிவாஸ், யாரை மனதில் வைத்து இப்படியான கருத்தைக் கூறினார் என்பது அவருக்கே வெளிச்சம்.












Click it and Unblock the Notifications