தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் தேதி அறிவிப்பு.. தேர்தல் அதிகாரி முக்கிய அப்டேட்
சென்னை: தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வரும் பிப்ரவரி 17 ஆம் தேதி வெளியிடப்படும் என தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ளார். வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்ய ஜனவரி 18 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதேபோன்று வரைவு வாக்காளர் பட்டியலும் டிசம்பர் 19 ஆம் தேதி வெளியாகி இருந்தது.
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் சிறப்பு தீவிர திருத்த பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. எஸ்.ஐ.ஆர் எனப்படும் இந்த பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வீடு வீடாக சென்று படிவங்களை வழங்கி பின்னர் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை சரிபார்க்கும் பணி நடந்தது.

வரைவு வாக்காளர் பட்டியல்
இதையடுத்து வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் தமிழகத்தில் மட்டும் மொத்தம் 94 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டன. வீடு மாறியவர்கள், முகவரி மாற்றம், திருத்தம் செய்தல், புதிதாக பெயர் சேர்த்தல் பணிகள் நடந்து வருகிறது. வரும் 18 ஆம் தேதி வரை இதற்கு விண்ணப்பிக்கலாம்.
இறுதி வாக்காளர் பட்டியல் எப்போது?
இந்த நிலையில் தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் எப்போது வெளியாகும் என்ற அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி வரும் பிப்ரவரி 17 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்களின்படி வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தம் மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த செயல்முறையின் ஒரு பகுதியாக, கணக்கீட்டு கட்டத்தின் போது கணக்கீட்டு படிவங்களை சமர்ப்பித்த வாக்காளர்களின் பெயர்களை உள்ளடக்கிய வரைவு வாக்காளர் பட்டியல் 19 டிசம்பர், 2025 அன்று வெளியிடப்பட்டது.
பிப்ரவரி 10 ஆம் தேதி வரை
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பின்னர், ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் 19.12.2025 முதல் 18.01.2026 வரை தாக்கல் செய்யப்பட்டு, அதே காலகட்டத்திற்குள் பரிசீலித்து முடிவு செய்யப்படும். அறிவிப்புக் காலகட்டமானது 2025 டிசம்பர் 19 முதல் 2026 பிப்ரவரி 10 வரை ஆகும்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் வழிகாட்டுதல்களின்படி, விவரங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டிய வாக்காளர்களுக்கு வாக்காளர் பதிவு அலுவலர் (ERO) / உதவி வாக்காளர் பதிவு அலுவலர் (AERO) மூலம் அறிவிப்புகள் வழங்கப்படும்.
பிப்ரவரி 17 ஆம் தேதி வெளியிடப்படும்
இந்திய தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள 13 ஆவணங்களில் தங்களுக்கு பொருந்தக் கூடிய ஆவணத்தை வாக்காளர்கள் விசாரணையின் போது சமர்ப்பிக்க வேண்டும். ஆவணங்கள் முறையாக சரிபார்க்கப்பட்ட பின், தகுதியுள்ள வாக்காளர்களின் பெயர்கள் இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவதை சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்கள் முடிவு செய்வர்.
மேலும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் பொருட்டு, வாக்காளர் பதிவு அலுவலர்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி இந்நடைமுறை குறித்து விளக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியலானது 17.02.2026 அன்று வெளியிடப்படும். என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications