மருத்துவமனையில்.. இப்போது எப்படி இருக்கிறார் அண்ணா பல்கலை. மாணவி பலாத்கார குற்றவாளி ஞானசேகரன்?
சென்னை: அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணையின்போது, வலிப்பு வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஞானசேகரனின் உடல்நிலை சீரானதை தொடர்ந்து மீண்டும் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் 23 ஆம் தேதி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானார். இந்தச் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரியாணி கடை நடத்தி வந்த ஞானசேகரன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு போலீசார், முதற்கட்டமாக சிறையில் உள்ள ஞானசேகரனின் வீடு மற்றும் சம்பவம் நடந்த அண்ணா பல்கலைக்கழக வளாகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
பின்னர், ஞானசேகரனை 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்தனர். சிறப்பு புலனாய்வு குழு கோரிய 7 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கி சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து ஞானசேகரனிடம் விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு போலீசார் அழைத்து சென்றனர்.
இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக காவலில் எடுக்கப்பட்டுள்ள ஞானசேகரனிடம் விடிய விடிய போலீசார் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியானது. எழும்பூர் காவல் நிலையத்தில் வைத்து ஞானசேகரனிடம் விடிய விடிய விசாரணை நடைபெற்றது.
நேற்று முன்தினம் இரவு ஞானசேகரனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. அவரை, உடனடியாக சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு ஞானசேகரனுக்கு தலையில் ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது. இதர சிகிச்சைகளும் அவருக்கு வழங்கப்பட்டன. தற்போது, அவரின் உடல் நிலை சீராக இருப்பதாகவும், போலீஸ் காவலில் அவர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளார் என்றும் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.
வலிப்பு வந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஞானசேகரனின் உடல்நிலை சீரானதை தொடர்ந்து அவரிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் மீண்டும் விசாரணையை தொடங்கி உள்ளனர். ஞானசேகரனின் செல்போன் மற்றும் லேப்டாப் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்த நிலையில் அதில் கிடைத்த ஆதாரங்களை அடிப்படையாக வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்ணா நகர் துணை ஆணையர் சினேக பிரியா தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவினர், ஞானசேகரனால் வேறு ஏதேனும் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனரா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications