ரஜினி கட்சி ஆரம்பிக்கவில்லை! அதான் பாஜகவுக்கு வந்துட்டோம்.. சிவகங்கை ரஜினி ரசிகர் மன்றத்தினர்
சென்னை: ரஜினிகாந்த் கட்சி தொடங்கவில்லை என்பதால் நாங்கள் பாஜகவில் இணைந்தோம் என சிவகங்கை மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தினர் தெரிவித்தனர்.
சென்னையில் பாஜக தலைமையிடமான கமலாலயத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் சிவகங்கை மாவட்ட ரஜினி ரசிகர்கள் பாஜகவில் இன்று இணைந்தனர்.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர் பேசியதாவது: 2017ஆம் ஆண்டு ரஜினிகாந்த் ஆன்மீக அரசியலை முன்னெடுத்தார். இதனால் எங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் துரதிருஷ்டவசமாக அது நடக்க முடியாமல் போய்விட்டது.
2014 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகளாக நம் நாடு அடைந்திருக்கும் வளர்ச்சியை பார்த்து நாங்கள் பாஜகவில் இணைந்துள்ளோம். பிரதமர் நரேந்திர மோடி உலகத் தலைவர்களில் சிறந்தவர் என்பதை இந்தியாவை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வதிலிருந்தே நிரூபித்துவிட்டார்.
அவருடைய கரத்தை வலுப்படுத்தும் வகையில் சிவகங்கை மாவட்ட ரஜினி ரசிகர்கள் எல்லாம் சேர்ந்து பாஜகவில் இணைந்துள்ளோம். தொலைநோக்கு பார்வையுடன் பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார். இதனால் உலக பொருளாதாரத்தில் நாம் 5ஆவது இடத்தில் உள்ளது.
தற்போது மீண்டும் நரேந்திர மோடி பிரதமராக வந்ததும் பொருளாதாரத்தை 3ஆவது இடத்திற்கு கொண்டு செல்வதற்கான இலக்கை அமைத்துள்ளார்கள். அதை சாத்தியப்படுத்தும் வகையில் சிவகங்கை தொகுதியில் பாஜக வென்று இங்கிருந்து எம்பியை அனுப்புவதற்காக நாங்கள் பாடுபடுவோம்.
பாஜக தலைவர் அண்ணாமலை 234 தொகுதிகளிலும் நடைப்பயணம் மேற்கொண்டு ஒரு புரட்சியையே ஏற்படுத்தியிருக்கிறார். எனவே நாங்கள் அனைவரும் சேர்ந்து அண்ணாமலையின் வெற்றிக்காகவும் பாஜக வெற்றிக்காகவும் பாடுபடுவோம் என்று நான் உறுதியளிக்கிறேன். எங்கள் மாவட்டத்தின் அடையாளம் எச்.ராஜாவின் ஆசிர்வாதத்துடன் இங்கு வந்துள்ளோம். ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்காததால்தான் நாங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு கரம் கொடுக்க இங்கு வந்துள்ளோம் என்றார்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக கடந்த 2017ஆம் தேதி அறிவித்தார். இதையடுத்து தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றம் என பெயர் மாற்றினார். ஆனால் அவர் கட்சியை தொடங்கவே இல்லை. இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு கட்சியை தொடங்குவதாக மீண்டும் அறிவித்தார். அதாவது டிசம்பர் மாதம் இறுதியில் அல்லது 2021 ஆம் ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் கட்சி தொடங்குவதாக அறிவித்திருந்தார்.
அப்போது கொரோனா பரவிய கால கட்டம். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட ரஜினிக்கு நோய் தொற்றுகள் எளிதாக வந்து தொற்றிக் கொள்ளும். இந்த நிலையில் அண்ணாத்த படப்பிடிப்பு ஹைதராபாத்தில் இருந்த போது உடல்நலம் பாதிக்கப்பட்டு அங்குள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதையடுத்து உடல்நலம் தேறி சென்னை வந்த அவர் தனது உடல்நலத்தை கருத்தில் கொண்டு ரசிகர்களின் நலனையும் கருத்தில் கொண்டு தற்போது கட்சி ஆரம்பிக்கும் முடிவை கை விடுகிறேன் என ரஜினிகாந்த் 2020 ஆம் ஆண்டு அறிவித்திருந்தார். இதற்காக ரசிகர்கள் எத்தனையோ தர்ணா போராட்டங்களை நடத்தியும் அவர் அரசியலுக்கு வரவில்லை என்று தெரிவித்துவிட்டார்.












Click it and Unblock the Notifications