சிவகார்த்திகேயன் பராசக்தி: இந்தி போரில் துப்பாக்கிச் சூட்டில் பலியான மாணவர் ராசேந்திரனின் வாழ்க்கை?
சென்னை: நடிகர்கள் சிவகார்த்திகேயன், அதர்வா, ரவி மோகன் (ஜெயம் ரவி) நடிப்பில் வெளியாகும் பராசக்தி திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. கருணாநிதி வசனத்தில் சிவாஜி கணேசன் திரைத்துறைக்கு அறிமுகமான படமான பரசாக்தியின் பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த திரைப்படம், இந்தி திணிப்புக்கு எதிரான 1967-ம் ஆண்டு போராட்டத்தில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் பலியான சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவரான ராசேந்திரனின் (ராஜேந்திரன்)( வாழ்க்கை வரலாறா? என்கிற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
தமிழ்த் திரை உலகில் பெரும் புரட்சியையே ஏற்படுத்திய படம்தான் கருணாநிதி-சிவாஜியின் பராசக்தி திரைப்படம். அன்றைய பர்மா- இன்றைய மியான்மரில் இருந்து அகதிகளாக தமிழ்நாட்டுத் தமிழர்கள் வெளியேற்றப்பட்ட துயரம் தொடங்கி பகுத்தறிவு சிந்தனைகளின் உச்சமாக, எந்தக் காலத்திலடா அம்பாள் பேசினாள்; கோவில் கூடாது என்பது அல்ல.. கோவில் கொடியவர்களின் கூடாரமாகிவிடக் கூடாது என்பதுதான் என்கிற கொள்கைகளை உரத்துப் பேசி ஒட்டுமொத்த தமிழ்த் திரை உலகத்தை மட்டுமல்ல அன்றைய தமிழ்ச் சமூகத்தையே உலுக்கி எடுத்த திரைப்படம்தான் பராசக்தி.

பராசக்தியில் சிவாஜி பேசும் நீதிமன்ற வசனங்களை பேசாத பள்ளிக் கூடங்கள், கல்லூரிகள், பட்டிமன்றங்களும் இல்லை.. பின்னாளில் திரைத்துறைக்கு வந்து அதி உச்சம் தொட்ட திரை பிரபலங்கள் பராசக்தியின் நீதிமன்ற வசனங்களை பேசித்தான் வாய்ப்புகளைப் பெற்றனர் என்பதற்கு நடிகர் சத்யராஜ் உள்ளிட்டோர் உதாரணம்.
இப்படி தமிழ்நாட்டின் தமிழரின் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய பராசக்திதான் தமிழ் சினிமா உலகுக்கு சிவாஜி கணேசன் எனும் ஆகப் பெரும் ஆளுமையை அள்ளிக் கொடுத்தது. அன்று ஏவிஎம் நிறுவனம் தயாரித்த பராசக்தி திரைப்படம் காலத்தால் அழியாத பெரும் காவியம்; புரட்சிகரமான படைப்பு.
பின்னாளில் பராசக்தி என்ற பெயரை முன்னும் பின்னுமாக வைத்தும் பல படங்கள் வெளியாகி இருந்தன; ஆனால் அதே பராசக்தி என்ற பெயரில் தற்போது சிவகார்த்திகேயன், அதர்வா, ரவி மோகன் (ஜெயம் ரவி) நடிப்பில் வெளியாக இருக்கிறது புதிய திரைப்படம். இயக்குநர் சுதா கொங்கரா.
இப்படத்தின் முதல் முன்னோட்ட காட்சி நேற்று வெளியானது. 1960களில் நடந்த இந்தி திணிப்பு எதிர்ப்புப் போரை மையமாகக் கொண்ட அதாவது மாணவர் புரட்சியை மையமாகக் கொண்ட படமாக பராசக்தி வெளியாகிறது என அதில் உணர்த்தப்பட்டுள்ளது. சிவகார்த்தியேனின் "பெருஞ்சேனை வேண்டும்; பெருஞ்சேனை ஒன்று வேண்டும்" என்ற வசனம் பெரும் கவனம் ஈர்த்திருக்கிறது.
மேலும் 1967-ம் ஆண்டு நடைபெற்ற இந்தி திணிப்பு எதிர்ப்புப் போரில் துப்பாக்கிச் சூட்டில் பலியான சிவகங்கை ராஜேந்திரன் என்ற தமிழினத்தின் ஒப்பற்ற மொழிப் போராளியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டதுதான் இந்த பராசக்தி திரைப்படம் எனவும் கூறப்படுகிறது.
சிவகங்கை மாவட்டம் கல்லலைச் சேர்ந்த மாணவர் ராஜேந்திரன், காவல்துறையில் பணியாற்றிய முத்துக்குமாரின் மகன். இவரது தாயார் பெயர் வள்ளிமயில்.
சிதம்பரம் ராஜேந்திரனின் களப்பலியானது அன்று தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு எதிர்ப்புப் போரை அதிஉச்ச கொந்தளிப்பு நிலைக்குக் கொண்டு சென்றது. அந்த இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்தான் தமிழ்நாட்டில் காங்கிரஸ் பேரியக்கத்தின் ஆட்சிக்கே இறுதி முடிவுரை எழுதி திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்கும் வித்திட்டது என்பது வரலாறு.
இதில் இன்னொரு சிறப்பும் உள்ளது. இந்தி திணிப்பு எதிர்ப்பு போரில் களப்பலியான காவல்துறையில் பணியாற்றிய முத்துக்குமாரின் மகன் சிவகங்கை ராஜேந்திரனின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாக எதிர்பார்க்கப்படும் பராசக்தி திரைப்படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன், ஒரு காவல்துறை அதிகாரியின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications