தமிழகத்தில் இந்த 6 மாவட்டமா நீங்க.. 25 வட்டாரங்களில் வர்றீங்களா.. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
சென்னை: கடந்து ஆண்டு வடகிழக்குப் பருவ மழை தமிழகத்தில் புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் குறைவாகவே பெய்தது. இதனால் வறட்சி ஏற்பட்ட 25 வட்டாரங்களை "மிதமான வேளாண் வறட்சி" கொண்டவையாக தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது.
பொதுவாக பருவ மழை போதிய அளவு பெய்யாமல் போகும் போது பயிர் விளைச்சல்கள் கடுமையாக பாதிக்கப்படும். பருவமழை குறிப்பிட்ட சதவீதத்திற்கும் குறைவாக பெய்தால் வேளாண்மை பாதிக்கப்படும். அத்துடன் நிலத்தடி நீர் மட்டமும் குறைந்துவிடும். நி இதனால், கோடை காலத்தில் நீரியல் வறட்சி ஏற்படும். அப்படியான சூழல் வரும் போது அரசு, அந்த பகுதிகளை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்கும்.

அந்த வகையில், தமிழகத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் பெய்த மழையளவு ஆய்வு செய்யப்பட்ட போது. கோவை, கன்னியாகுமரி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், நீலகிரி ஆகிய 7 மாவட்டங்களில் 38 வட்டாரங்கள் பற்றாக்குறை மற்றும் அதிக பற்றாக்குறை என்ற அளவில் மழையை பெற்று இருந்தன. அப்பகுதிகளில் நிலத்தடி நீர் குறைந்தது. இதனால், கோடை காலத்தில் நீரியல் வறட்சி ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த 38 வட்டாரங்கள் நீரியல் வறட்சி வட்டாரங்களாக 2019ம் ஆண்டு தமிழக அரசு அறிவித்தது.
2019ம் ஆண்டே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், சேலம், வேலூர், திருச்சி, பெரம் பலூர், நாமக்கல், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஈரோடு, புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், விழுப்புரம், திருவண் ணாமலை, அரியலூர், நாகப்பட்டி னம், கடலூர், ராமநாதபுரம் ஆகிய 24 மாவட்டங்கள் நீரியல் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளாக அறிவித்தது.
இந்நிலையில் 2022ம் ஆண்டில் அதாவது கடந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை போதிய அளவு பெய்யவில்லை. குறிப்பாக தமிழகத்தில் புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் 01.10.2022 முதல் 31.12.2022 வரையிலான வடகிழக்கு பருவமழைக் காலத்தில் குறைவாகவே மழை பெய்தது.
காரணமாக பயிர்கள் வாடியதைத் தொடர்ந்து, 33% மற்றும் அதற்கு மேல் பயிர்கள் பாதிப்புக்கு உள்ளானதால் 25 வட்டாரங்கள் "மிதமான வேளாண் வறட்சியால்" பாதிப்புக்கு உள்ளானதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
இதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆவுடையார்கோவில், மணமேல்குடி, சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டை, இளையான்குடி, காளையார்கோவில்,மானாமதுரை, இராமநாதபுரம் மாவட்டத்தில் போகலூர், கடலாடி, கமுதி, மண்டபம், முதுகுளத்தூர், நயினார்கோவில், பரமக்குடி, ஆர்.எஸ்.மங்கலம், இராமநாதபுரம், திருப்புல்லாணி, திருவாடானை, தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம், கடையநல்லூர், கீழப்பாவூர், மேலநீலிதநல்லூர், சங்கரன்கோவில், தூத்துக்குடி மாவட்டத்தில் ஆள்வார்திருநகரி, விருதுநகர் மாவட்டத்தில் நரிக்குடி, திருச்சுழ ஆகிய 25 வட்டாரங்கள் "மிதமான வேளாண் வறட்சியால்" பாதிப்புக்கு உள்ளானதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும், இது தொடர்பாக தேவையான நடவடிக்கையினை எடுக்குமாறு வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் மாநில நிவாரண ஆணையர் ஆகியோருக்கு அறிவுறுத்தல் வழங்கி உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications