புள்ளப் பூச்சிக்கெல்லாம் முளைத்த கொடுக்கு! ஆளும், ஆண்ட கட்சிகளை சிதற விட்ட சிறிய கட்சிகள்! ட்விஸ்ட்!
சென்னை: எப்போதும் இல்லாத வகையில் தமிழகத்தில் சிறிய கட்சிகளுக்கான மவுசு அதிகரித்துள்ளது. 100 ஓட்டு கிடைத்தால் கூட விடக் கூடாது என்பதில் திமுக அதிமுக உறுதியாக இருப்பதால் சிறிய கட்சிகள் கூட்டணி பேரத்தை அதிகரித்து வருகின்றன. அதற்கு கூட்டணி முடிவுகளை உறுதியாக சொல்லாமல் இழுத்து அடிப்பதோடு, '15 நாளில் முடிவு', 'தை பிறந்தால் வழி பிறக்கும்' போன்ற மந்திரங்களை பயன்படுத்தி வருகின்ற சில அரசியல் தலைவர்கள் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
தமிழக அரசியலில் பொதுவாக தேர்தல் நெருங்கும் காலங்களில் ஒரு எழுதப்படாத மரபு இருந்தது. திமுக, அதிமுக என இரண்டு பிரதான கட்சிகளும் தங்கள் தலைமைக் கழகங்களில் உறுதியாக நிர்பார்கள். சிறிய கட்சிகள் தாமாகவே வந்து கூட்டணியில் இணைய வேண்டும் என்பது தான் அந்த கடந்த கால நடைமுறை.
பெரிய கட்சிகள் சிறிய கட்சிகளை தேடி அலையும் சூழல் இதுவரை காணப்படவில்லை. ஆனால் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அந்த அரசியல் கணக்கு முற்றிலும் மாறி வருகிறது. இம்முறை, பெரிய கட்சிகள் தங்களின் வெற்றியை உறுதி செய்ய சிறிய கட்சிகளின் கதவைத் தட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

2026 சட்டமன்ற தேர்தல்
இதை உணர்ந்த சிறிய கட்சிகள், முடிவை அவசரமாக அறிவிக்காமல் காலம் இழுத்து, தங்களுக்கான பேரத்தை அதிகரிக்க முயற்சித்து வருகின்றன. பாமக விவகாரம் இதற்கான முக்கிய உதாரணமாக பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்த பாமக எங்களிடமே உள்ளது என அன்புமணி ராமதாஸ் கூறினாலும், ராமதாஸ் அணியின் நிலைப்பாடும் முக்கியம் என்பதால் பாஜக தொடர்ந்து தைலாபுரத்தை வட்டமிடுகிறது. அதே நேரத்தில், திமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தரப்புகளும் பாமகவை தங்கள் பக்கம் இழுக்க முயற்சி செய்கின்றன என்ற பேச்சும் பரவலாக உள்ளது.
சிறிய கட்சிகள்
வாக்கு வங்கி அளவில் பெரியதாக இல்லை என சொல்லப்படும் தேமுதிக கூட, இம்முறை முக்கிய அரசியல் சக்தியாக மாறியுள்ளது. கூட்டணி முடிவை இதுவரை அறிவிக்காமல் இழுத்தடிக்கும் அந்தக் கட்சிக்கு, திமுக, அதிமுக, தவெக என மூன்று தரப்புகளிலும் இருந்து சலுகை பேச்சுகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகின்றன. இதுவே, தற்போதைய அரசியல் சூழலின் மாற்றத்தை தெளிவாக காட்டுகிறது.
கூட்டணி கணக்கு
அதேபோல், ஆதரவாளர்கள் ஒருவர் பின் ஒருவராக விலகினாலும், ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் மதிப்பு இன்னும் குறையவில்லை என்பதே உண்மை. பாஜக தரப்பில் அவருக்கு உயர்பதவி குறித்த ஆசைகாட்டல் இருப்பதாகவும், திமுக தரப்பில் அவரது குடும்பத்தினருக்கு அரசியல் வாய்ப்புகள் குறித்து பேச்சுவார்த்தை நடந்ததாகவும் அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. இருப்பினும், ஓபிஎஸ் தனது முடிவை வெளிப்படையாக அறிவிக்காமல் காலம் இழுத்து வருகிறார்.
தவெக அரசியல்
விஜயின் தவெக அரசியலில் நுழைந்த பிறகு, "ஆட்சியில் பங்கு" என்ற கோரிக்கை வலுவாக முன்வைக்கப்பட்டதும், சிறிய கட்சிகளின் மதிப்பை மேலும் உயர்த்தியுள்ளது. சில நூறு வாக்குகள் கூட வெற்றியை தீர்மானிக்கக்கூடிய சூழலில், ஒவ்வொரு சிறிய கட்சியின் ஆதரவையும் பாதுகாப்பது பெரிய கட்சிகளுக்கு கட்டாயமாகியுள்ளது. இதனால்தான், "இன்னும் 15 நாட்களில் முடிவு", "தை மாதத்திற்குள் அறிவிப்பு", "சரியான நேரம் பார்த்து அறிவிப்போம்" போன்ற வாசகங்களே தற்போது சிறிய கட்சிகளின் அரசியல் மந்திரமாக மாறியுள்ளது. பெரிய கட்சிகள் அவசரத்தில் இறங்கி வர, சிறிய கட்சிகள் பொறுமையாக ஆட்டத்தை நகர்த்தும் இந்த தலைகீழ் அரசியல், 2026 தேர்தலின் முக்கிய அடையாளமாக மாறி வருகிறது.












Click it and Unblock the Notifications