ஜிஎஸ்டி அலுவலகத்தில் அந்த ரூ.15000 எங்கே இருந்தது தெரியுமா? ராணிப்பேட்டை சூப்பர்வைஸரை சாய்த்த சிபிஐ
சென்னை: அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவர டிஜிட்டல் முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டாலும், சில அதிகாரிகளின் பணத்தாசை சாமானிய மக்களை வஞ்சித்துக்கொண்டே இருக்கிறது. குறிப்பாக, வணிகத் துறையில் தொழில் தொடங்க முனையும் நடுத்தர வர்க்கத்தினரிடம் அதிகாரம் என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி லஞ்சம் பறிக்கும் போக்கு தொடர்கதையாகி வருகிறது. இதோ நேற்றைய தினம் 2 அரசு அதிகாரிகள் வெவ்வேறு துறையில் லஞ்சம் வாங்கி அசிங்கப்பட்டுள்ளார்கள்.
அரசு அதிகாரிகளிடையே புரையோடிப் போயுள்ள லஞ்ச கலாச்சாரம் பெரும் கவலையளிப்பதாகவே உள்ளது. ஊழல் தடுப்புப் பிரிவினர் தொடர்ந்து அதிரடி சோதனைகளை நடத்தி, தவறு செய்யும் அதிகாரிகளைக் கைகழுவி சிறைக்கு அனுப்பினாலும், பணத்தாசை என்பது பலருடைய நேர்மையை மறைத்துவிடுகிறது.

அரசு அதிகாரிகள்
ஏழை, எளிய மக்களின் நியாயமான தேவைகளைக் கூடப் பூர்த்தி செய்ய லஞ்சம் என்ற பெயரில் பணம் பறிக்கப்படுவது, நிர்வாகத்தின் மீதான நம்பிக்கையைச் சிதைப்பதோடு, எத்தனை பேர் பிடிபட்டாலும் லஞ்சப் பேய் அடங்கவில்லை என்பதையே இப்பேதாதைய சூழல்கள் காட்டுகின்றன.
தருமபுரி மாவட்டம், அரூர் வனச்சரக அலுவலகத்தில் வனச்சரக அலுவலராகப் பணியாற்றி வருபவர் சரவணன். அதே பகுதியைச் சேர்ந்த விவேகானந்தன் என்பவர், தனது பட்டா நிலத்தில் இருந்த தேக்கு மரங்களை வெட்டுவதற்கு அனுமதி கோரி வனச்சரக அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.
லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள்
ஆனால், இந்த அனுமதியை வழங்குவதற்கு வனச்சரக அலுவலர் சரவணன் மற்றும் அவருடன் பணியாற்றும் வனக் காப்பாளர் மணி ஆகியோர் 50 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக தருமாறு கேட்டுள்ளனர். லஞ்சம் கொடுக்க விரும்பாத விவேகானந்தன், இது குறித்து தருமபுரி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் புகார் அளித்தார்.
ஊழல் தடுப்புத் துறை போலீசாரின் ஆலோசனையின்படி, விவேகானந்தன் ரசாயனம் தடவிய 50 ஆயிரம் ரூபாய் பணத்தை வனச்சரக அலுவலகத்திற்கு எடுத்து சென்றார். அங்கு வனக் காப்பாளர் மணி முன்னிலையில், வனச்சரக அலுவலர் சரவணன் அந்தப் பணத்தைப் பெற்றுக் கொண்டபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார் அவர்களைக் கையும் களவுமாகப் பிடித்தனர்.
இதனைத் தொடர்ந்து, சரவணன் மற்றும் மணி ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களின் அலுவலகம் மற்றும் இல்லங்களிலும் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் உள்ள அரசு வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை ஜிஎஸ்டி அலுவலகம்
அதேபோல ராணிப்பேட்டை மாவட்டத்திலும் ஒரு கொடுமை நடந்துள்ளது.. ஜி.எஸ்.டி ராணிப்பேட்டை சரக அலுவலகத்தில் சூப்பர்வைசராக பணியாற்றி வருபவர்கள் எல்லமல்லி ரிங்கேஷ், மற்றும் இன்ஸ்பெக்டர் ராம்கேஷ் மீனா.. இவர்கள் 2 பேரும் தங்கள் பதவியைத் தவறாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
அதாவது அந்த பகுதியைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் தனது தொழில் தொடர்பான ஜி.எஸ்.டி பதிவை முறைப்படி அங்கீகாரம் செய்யக் கோரி இந்த அதிகாரிகளை அணுகியுள்ளார்.
ஆனால், சட்டப்பூர்வமாகச் செய்ய வேண்டிய இந்த வேலைக்குச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் 30,000 ரூபாய் லஞ்சமாக தந்தால் மட்டுமே கோப்புகளை நகர்த்த முடியும் என்று கட்டாயப்படுத்தினார்களாம்.. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த வியாபாரி, நேர்மையற்ற முறையில் பணம் கொடுக்க விரும்பாமல் சென்னை சி.பி.ஐ அதிகாரிகளிடம் இது குறித்து விரிவான புகார் அளித்தார்.
சி.பி.ஐ அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி, அந்த வியாபாரி ரசாயனம் தடவிய நோட்டுகளை எடுத்துக் கொண்டு அதிகாரிகளை சந்திக்க போயிருக்கிறார்.. சூப்பர்வைசர் எல்லமல்லி ரிங்கேஷ் முதற்கட்டமாக 15,000 ரூபாயைப் பெற்றுக்கொண்டபோது, மறைந்திருந்த சி.பி.ஐ அதிகாரிகள் அவரை மின்னல் வேகத்தில் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
15,000 ரூபாய் கழிவறையில்
அவரிடம் நடத்திய விசாரணையில், இன்ஸ்பெக்டர் ராம்கேஷ் மீனாவிற்கும் இதில் நேரடித் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடனே அதிகாரிகள் இன்ஸ்பெக்டரின் அறைக்குச் சென்று சோதனை நடத்தியபோது, அவர் லஞ்சப் பணத்தை மறைக்க முயன்றது தெரியவந்தது. தீவிரத் தேடுதலுக்கு பிறகு, கழிப்பறையில் பதுக்கி வைத்திருந்த 15,000 ரூபாய் லஞ்சப் பணத்தை அதிகாரிகள் மீட்டனர்.
இப்போது இந்த 2 இரு அதிகாரிகளும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் ராணிப்பேட்டை மற்றும் சென்னை ஜி.எஸ்.டி வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பாத்ரூமில் ஃபிளஷ்
முன்னதாக, சிபிஐ அதிகாரிகளைக் கண்டதும் ஆதாரங்களை அழிக்கும் நோக்கில் ஆய்வாளர் லஞ்ச பணத்தை எடுத்துக் கொண்டு கழிவறைக்குள் போட்டு ஃபிளஷ் செய்துள்ளார்.- அப்போதும்கூட அதிகாரிகள் விடாமுயற்சியுடன் அங்கிருந்து லஞ்சப் பணத்தை மீட்டிருக்கிறார்கள்..
இப்படி அடிக்கடி அதிரடி சோதனைகளை நடத்தி ஊழல்வாதிகளைப் பிடித்தாலும், சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிவிடலாம் என்ற துணிச்சலில் அரசு அதிகாரிகள் பொதுமக்களைச் சுரண்டுவது சமூகத்தின் நேர்மைக்கு விடப்பட்ட சவாலாகவே பார்க்கப்படுகிறது....!!












Click it and Unblock the Notifications