நல்ல சேதி வரப்போகுது.. மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 வேண்டி விண்ணப்பித்தீர்களா? இன்று முதல் எஸ்.எம்.எஸ்
சென்னை: மகளிர் உரிமைத் தொகைக்காக விண்ணப்பித்து கிடைக்காமல் மேல்முறையீடு செய்து இருப்பவர்களின் கைப்பேசி எண்களுக்கு தமிழ்நாடு அரசு எஸ்.எம்.எஸ். ஒன்றை அனுப்பி வருகிறது.
ரூ.1000 கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தை தமிழ்நாடு அரசு கடந்த செப்டம்பர் மாதம் முதல் செயல்படுத்தி இருக்கிறது. இதற்காக 3 கட்டங்களாக மாநிலம் முழுவதும் முகாம்கள் நடத்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த விண்ணப்பங்கள் அரசிடம் உள்ள தகவல் தரவு தளங்களில் இருக்கும் தகவல்களுடன் ஒப்பிடப்பட்டு சரிபார்க்கப்பட்டன. அதன் பின்னர் அரசு அலுவலர்களால் நேரடி கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இப்படி விபரங்கள் சரிபார்க்கப்பட்டு விதிமுறைகளைப் பூர்த்தி செய்த 1.065 கோடி மகளிர் முதல்கட்ட பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டனர். அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைப் பூர்த்தி செய்யாத விண்ணப்பங்களும், தகுதியின்மைக்கு உள்ளான விண்ணப்பங்களும் ஏற்கப்படவில்லை. விண்ணப்பதாரர்களின் விண்ணப்ப முடிவு நிலை குறித்த குறுஞ்செய்தி விண்ணப்பதார்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் இ சேவை மையம் வழியாக வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்ய தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியது.
மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள் தீர்வு கிடைக்கும் என அரசு அறிவித்தது. அதன்படி கடந்த அக்டோபர் மாதம் மகளிர் உரிமைத் தொகை பெற மேலும் 5,041 தகுதியான குடும்பத் தலைவிகள் கண்டறியப்பட்டனர். உரிமைத் தொகை பெற்றுக்கொண்டவர்களில் இறந்துவர்கள் மற்றும் தகுதியற்றவர்கள் என கண்டறியப்பட்ட 8,833 பெயர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். கடந்த மாதமும் கள ஆய்வில் இருப்பதாக தெரிவிக்கப்பட்ட மேல்முறையீட்டு விண்ணப்பங்களில் உள்ள குடும்பத் தலைவிகளின் கைப்பேசி எண்களுக்கு அரசு ஊழியர்கள் தொடர்பு கொண்டனர்.
அவர்கள் விண்ணப்பங்களில் குறிப்பிடப்பட்டு உள்ள விபரங்களை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டனர். விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்ட விபரங்களை பெண்களிடம் கேட்டு அது சரியா என உறுதிபடுத்தி, விண்ணப்பதாரர்களின் வங்கிக் கணக்குகளில் இந்த மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வரவு வைக்கப்பட்டது. அதே சமயம் மேலும் பல மேல்முறையீட்டு விண்ணப்பதாரர்களுக்கு இந்த மாதமும் பணம் வரவில்லை. அக்டோபர் 25 ஆம் தேதி வரை 11 லட்சத்து 85 ஆயிரம் பேர் மேல்முறையீடு செய்து உள்ளனர்.
மேல்முறையீடு செய்தவர்களின் விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணிகள் தொடங்கி இருப்பதாகவும், தகுதியானவர்களுக்கு வரும் நவம்பர் 25 ஆம் தேதி முதல் குறுஞ்செய்திகள் அனுப்பப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்து இருந்தது. அந்த வகையில் தங்கள் மேல்முறையீட்டு மனு மீதான விண்ணப்பம் ஏற்கப்படுமா என்று குடும்பத் தலைவிகள் குறுஞ்செய்திக்காக எதிர்பார்த்து காத்து உள்ளனர்.












Click it and Unblock the Notifications