“வாங்க பாபாசாஹேப் சார்”.. தவெகவில் இணைந்த வழக்கறிஞர் சத்தியகுமாரை வரவேற்ற விஜய்!
சென்னை: வழக்கறிஞர் சத்தியகுமார் இன்று விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்துள்ளார். சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் போன்ற உருவத்தோற்றம் கொண்டவர் வழக்கறிஞர் சத்தியகுமார். சமூக ஊடகங்களில் பிரபலமான அவர் இன்று தன்னை தவெகவில் இணைத்துக் கொண்டுள்ளார்.
2026 சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு தவெக தலைவர் விஜய், மக்கள் சந்திப்புகளை நடத்தி வருகிறார். தவெகவில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இணைந்து வருகின்றனர். அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் விஜய்யை சந்தித்து தவெகவில் இணைந்தார். இதைத்தொடர்ந்து, இன்னும் பலர் தவெகவில் இணைய இருப்பதாக ஈரோட்டில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜய் பேசியிருந்தார்.

இந்நிலையில், சமூக ஊடகங்களில் பிரபலமான வழக்கறிஞர் சத்தியகுமார் இன்று தவெகவில் இணைந்துள்ளார். சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் போன்ற உருவத்தோற்றம் கொண்டவர் வழக்கறிஞர் சத்தியகுமார். அவரை தவெகவுக்கு வரவேற்றுள்ளார் அக்கட்சியின் தலைவர் விஜய்.
இதுதொடர்பாக சத்தியகுமார் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தவெக தலைவர் புரட்சித் தளபதி விஜய் அவர்களை சந்தித்தது என் வாழ்க்கையின் மிக முக்கியமானதும், ஊக்கமளிக்கும் தருணமுமாகும். நான் அவரை சந்திக்கச் சென்றபோது, அவர் என் தோளில் கை வைத்துக் கொண்டு "வரவேற்கிறேன் பாபாசாஹேப் சார்" என்று கூறினார்.
நான் TVK-யின் கொள்கைத் தலைவர் பாரத ரத்னா டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களைப் போல இருக்கிறேன் என்று கூறி மகிழ்ந்தார். அதற்கு நான் பணிவுடன், "இது இறைவனின் அருளே" என்று பதிலளித்தேன். மேலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் தான் என்னுள் இருக்கும் பாபாசாஹேபை முதலில் அடையாளம் கண்டவர் என்றும் அவரிடம் பகிர்ந்தேன்.
Legal Talks யூடியூப் சேனலில் நான் பதிவிட்டுள்ள இந்திய அரசியலமைப்பு மற்றும் சட்டம் தொடர்பான அனைத்து காணொளிகளையும் அவர் பார்த்ததாகக் கூறினார். என் திறமை, அறிவு, கல்வித் தகுதி ஆகியவற்றை பாராட்டி, அங்கீகாரம் அளித்தது என்னை மிகவும் நெகிழ வைத்தது.
அதனைத் தொடர்ந்து, TVK-க்கு என்னை வரவேற்று, "இளம் தலைவராக உங்களைப் பெறுவதில் நான் மிக மகிழ்ச்சியடைகிறேன்" என்று கூறினார்.
அப்போது நான் அவரிடம் கூறியது:
• பாபாசாஹேப் டாக்டர் அம்பேத்கர் காலத்தில் வாழ்ந்திருந்தால் - அவருடன் சேர்ந்திருப்பேன்.
•நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் காலத்தில் - அவருடன் சேர்ந்திருப்பேன்.
•அறிஞர் அண்ணா காலத்தில் - அவருடன் சேர்ந்திருப்பேன்.
•புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். காலத்தில் - அவருடன் சேர்ந்திருப்பேன்.
புரட்சித் தலைவி ஜெயலலிதா அம்மா அவர்களின் காலத்தில் இருந்திருந்தால், அம்மாவுடன் நான் இணைந்திருப்பேன்.
இன்றைய இந்தக் காலகட்டத்தில்,
புரட்சித் தளபதி விஜய் அவர்கள் என் வாழ்க்கையில் இருப்பது எனக்கு கிடைத்த பெரும் ஆசீர்வாதம்.
தமிழ்நாட்டின் எதிர்காலம், சமூக நீதி, பாரத ரத்னா டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்ட உங்கள் கனவு - இவற்றிற்கு தோள் கொடுக்க நான் உங்கள் தலைமையை ஏற்றுக்கொண்டேன். அவர் என்னை மரியாதை செய்தார், பாராட்டினார், அங்கீகரித்தார், அவரது தலைமையின் கீழ் நான் TVK-யில் அதிகாரபூர்வமாக இணைந்தேன்.
மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் கூறியதுபோல்:
"இருளால் இருளை அகற்ற முடியாது; ஒளியால் மட்டுமே அது சாத்தியம்."
அந்த புதிய ஒளியாக,தமிழ்நாட்டின் எதிர்காலமாக நான் TVK தலைவர் புரட்சித் தளபதி விஜய் அவர்களைப் பார்க்கிறேன் - He is the "Voice for Voiceless".
இறுதியாக நான் அவரிடம் கூறியது:
"கிராமங்களிலிருந்து வரும் எங்களைப் போன்ற மக்களை அங்கீகரிக்க வேண்டும்.
அதிகாரமும் ஆட்சியும் சில எலீட் (Elite) மக்களிடமே சிக்கிக் கொள்ளக் கூடாது.
உண்மையான ஜனநாயகம் கிராமத்தின் குரலிலிருந்து வர வேண்டும்."
அதற்கு அவர் உறுதியுடன் பதிலளித்தார்: "நிச்சயமாக அதை நாம் செய்வோம்" இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இன்று ஊடகவியலாளர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு, அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஜேசிடி பிரபாகரின் மகன் அமலன் ஆகியோரும் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications