இன்னும் சிலரா? கலாஷேத்ரா பாலியல் வழக்கில் அடுத்தடுத்து அதிர்ச்சி!போலீஸ் விசாரணையில் ஷாக் தகவல்
சென்னை: கலாஷேத்ராவில் உள்ள நடன, இசை கல்லூரியில் பயின்று வரும் மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஹரி பத்மன் கைது செய்யப்பட்டு இருக்கும் நிலையில் இதில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பதாக நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்து உள்ளது.
சென்னை திருவான்மியூரில் அமைந்து இருக்கும் 80 ஆண்டுகள் பழமையான கலாஷேத்ரா அறக்கட்டளை மத்திய அரசால் இயக்கப்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளையின் கீழ் ருக்மிணி தேவி நுண்கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. பரதநாட்டியம் உள்ளிட்ட நடனம், இசை பயிற்சிகள் இந்த கல்லூரியில் அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவிகள் இங்கு பயின்று வருகின்றனர். இங்கு பணிபுரியும் பேராசிரியர்கள் சிலர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக கடந்த மார்ச் மாதம் புகார்கள் எழுந்தன. அங்கு பயின்றபோது ஆசிரியர்களால் பாலியல் தொல்லைக்கு உள்ளானதாக முன்னாள் மாணவி ஒருவர் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்தார்.

இந்த நிலையில் கடந்த மார்ச் 30 ஆம் தேதி மாணவ மாணவிகள் கல்லூரி வளாகத்திற்கு உள்ளே போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்ததை தொடர்ந்து அரசியல் தலைவர்கள், பெண்ணியவாதிகள், சமூக ஆர்வலர்கள், பிற கல்லூரி மாணவ மாணவிகள் என பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் குதித்தனர்.
தேசிய மகளிர் ஆணையத்துக்கு இந்த விவகாரம் தெரியவந்ததை தொடர்ந்து தமிழ்நாடு காவல்துறைக்கு கடிதம் எழுதியது. மேலும் மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி தலைமையில் கல்லூரி மாணவிகளிடம் விசாரணை தொடங்கியது. அதேபோல் கல்லூரி நிர்வாகம் தரப்பிலும் முன்னாள் டிஜிபி, முன்னாள் நீதிபதி, மருத்துவர் என மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் கலாஷேத்ரா நடன துறை உதவி பேராசிரியர் ஹரி பத்மன் தலைமறைவானார். அவரை கண்டுபிடித்து கைது செய்த போலீசார், நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள அவர், ஜாமீன் கோரி வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில் அவரது ஜாமீன் மனு இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அல்லி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். முன்னதாக நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "இதில் மேலும் சிலருக்கு இதில் தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. எனவே அது குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்பட வேண்டும்.
அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டால் சாட்சிகளை கலைப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது." என்று தெரிவித்தார். கலாஷேத்ரா அறக்கட்டளை பாலியல் வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரியவந்து உள்ளது என்று போலீசார் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications