ராமதாஸ் இடத்தில் அன்புமணி?.. அப்போ ஜிகே மணி?.. பரபரக்கும் பாமக திட்டங்கள்!
அன்புமணி ராமதாஸ் பாமகவின் தலைவராக நியமிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது
Recommended Video
சென்னை: பாமக தற்போது அடுத்த கட்டத்துக்கு நகர உள்ளது. பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்றைய கூட்டத்தில் பேசும்போதே ஒரு வார்த்தை சொன்னார், "அன்புமணி என்ற நல்ல இளம் தலைவரை தமிழகத்துக்கு பாமக கொடுத்திருக்கிறது" என்று. இதில் நிறைய அர்த்தம் உள்ளதாகவே பார்க்கப்படுகிறது. சுருக்கமாக சொல்ல போனால் ராமதாஸ் இடத்துக்கு அன்புமணியை நியமிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
அன்றிருந்த வலிமை இன்று பாமகவில் இல்லை. வேல்முருகன் அங்கு இப்போது இல்லை.. குரு இறந்துவிட்டார். இதற்கு நடுவில் அன்புமணி என்ற ஒற்றை மனிதன் மக்களுடன் நடத்திய திண்ணை பிரச்சாரம்தான் அக்கட்சியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது.
அதனால்தான் நடந்து முடிந்த தேர்தலில் அக்கட்சி எங்கேயுமே வெற்றி பெறவில்லை என்றாலும், வாக்கு சதவீதத்தை பெருமளவு கைப்பற்றி உள்ளது. இருந்தாலும் ராமதாஸ் ஒருபக்கம், அன்புமணி மறு பக்கம் என்ற இரட்டை தலைமை போக்கு நிறையவே காணப்பட்டு வருகிறது. இது கூட்டணி சமயத்தில் நன்றாகவே வெளிப்படவும் செய்தது.

முற்றுப்புள்ளி
இந்த சமயத்தில், பாமகவுக்கு 2 முக்கியமான கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஒன்று, வெற்றி பெற்ற வாக்கு சதவீதத்தை தக்க வைத்து கொள்வது, மற்றொன்று இரட்டை தலைமை என்ற போக்குக்கு முற்றுப்புள்ளி வைப்பது!

அன்புமணி
இதற்கு காரணம், உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால், இதில் எந்தவித சறுக்கலும் பாமகவுக்கு ஏற்பட்டு விடக்கூடாது என்பதால்தான். அதனால்தான் சில முக்கிய கட்சி நிர்வாகிகள்கூட, அன்புமணியே அனைத்தையும் பார்த்துக் கொள்ளட்டுமே என்ற யோசனையை கட்சி நிறுவனருக்கு தெரியப்படுத்தியதாகவும் சொல்லப்படுகிறது.

நாகரீக அரசியல்
இந்த விஷயத்தில் ராமதாசும் தீவிரமாக யோசித்து வருவதாக தெரிகிறது. ஒரு பக்கம் தன்னுடைய உடல்நலம், மூப்பு என்று ஒரு காரணம் எடுத்து கொண்டாலும், அன்புமணியை பொறுத்தவரை, நாகரீக அரசியலை கடைப்பிடிப்பவர், மக்களுடன் இவர் நடத்திய நேர்காணல் பிற கட்சிகளுக்கு இன்று வரை ரோல் மாடலாக உள்ளது. வார்த்தைகளை கொட்டிவிடாமல், அளந்து பேசும் போக்கை அன்புமணி கடைபிடித்து வருவதும் கவனிக்கத்தக்கது.

புதிய பொறுப்பு
அதிமுகவுடன் கூட்டணி வைத்துவிட்டு, அதன்மூலம் வந்த எதிர்ப்புகளை படாதபாடு பட்டு சமாளித்தவர் அன்புமணிதான். இப்படி நாசூக்கு போக்கு அவரிடம் நிறையவே காணப்படுவதால், இளைஞர் அணி தலைவர் என்ற பொறுப்பையும் தாண்டி தலைவர் பொறுப்புகூட தரப்படலாம் என்று பாமக வட்டாரத்தில் சொல்கிறார்கள்.

ஜிகே மணி
அதற்காக ஜிகே மணி பதவிக்கு ஆபத்து என்றில்லை.. என்ன ஆனாலும் சரி.. கட்சிக்கு இந்த நிமிஷம் வரை விசுவாசமான ஜிகே மணியை பாமக அவ்வளவு சீக்கிரம் கைவிட்டு விடாது. வேண்டுமானால், அவருக்கு ஒரு முக்கிய பதவியை தந்துவிட்டு, அன்புமணியை தலைவராக்க முயற்சிக்கலாம் அல்லது டாக்டர் ராமதாசின் பொறுப்புகளை முன்னின்று அன்புமணியே இனி கவனிக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

மிரட்டல்கள்
ஒருவேளை அதிமுக ராஜ்ய சபா சீட்டை அன்புமணிக்கு தராவிட்டாலும், கட்சியின் தலைமை பொறுப்பை கையில் எடுப்பதன்மூலம், வரும் தேர்தல்களில் பாமகவின் செல்வாக்கு உயரவே செய்யும்! குறிப்பாக வருகிற சட்டசபை பொதுத் தேர்தலில் பாமகவின் பங்கு நிச்சயம் வட மாவட்டங்களில் பெரிதாக இருக்கும். அதேசமயம். ரஜினி ரூபத்தில் மிரட்டல்களும் வரவுள்ளன. எனவே பாமகவின் வாக்கு வங்கியை பலப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

பாமக
எனவேதான் இப்போதே அன்புமணியை முழுமையாக களம் இறக்கி அதன் மூலம் பாமகவின் நிலையை ஸ்திரப்படுத்த ராமதாஸ் முயல்வதாக கருதப்படுகிறது. எப்படி இருந்தாலும் இந்த முடிவினை பாமக தொண்டர்கள் முழுமையாக ஏற்பார்கள் என்றே தெரிகிறது. ஏனெனில் அந்த அளவுக்கு தகுதியானவர் அன்புமணி என்பதில் சந்தேகம் இல்லை.












Click it and Unblock the Notifications