சூரியனா? சந்திரனா? கடிவாளம் போடுங்க! பற்றவைத்த துரைமுருகன்! "சீரியஸாக" கேட்ட ஸ்டாலின்! தகித்த கோட்டை
சென்னை: தமிழ்நாட்டில் உயர் பொறுப்பில் இருக்கும் சில ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் விரைவில் மாற்றப்படலாம் என ஆளும் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, தனது செயலாளர்கள் உதயசந்திரன், உமாநாத், சண்முகம், அனு ஜார்ஜ் மற்றும் சில முக்கியத் துறைகளின் உயரதிகாரிகளுடன் சமீபத்தில் ஆலோசனை நடத்தினார் முதல்வர் ஸ்டாலின்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பல முக்கியமான விஷயங்கள் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. பொதுவாக சட்ட ஒழுங்கு, தமிழ்நாடு மழை நிலவரம், காவிரி நீர் வரத்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் செய்யப்பட்ட நிவாரணங்கள் என்று பல விஷயங்களை ஆலோசனை செய்து உள்ளனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் வேறு சில விஷயங்களும் பேசப்பட்டதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

துரைமுருகன்
அந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகனும் கலந்துகொண்டிருக்கிறார். கூட்டத்தில், ஓராண்டில் சட்டமன்றத்தில் 110-விதியின் கீழ் படிக்கப்பட்ட அறிவிப்புகளின் நிலை குறித்து முதல்வர் ஸ்டாலின் கேட்டார். இந்த விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட சட்டங்களில் எத்தனை அமலுக்கு வந்து உள்ளது. எவை இன்னும் செயலுக்கு வரவில்லை. ஏன் வரவில்லை என்று கேட்டுள்ளார். தமக்கு வந்த பல்வேறு புகார்களின் அடிப்படையில் கேள்விகளை அடுக்கியிருக்கிறார் ஸ்டாலின். இதற்கு உரிய விளக்கங்களை அதிகாரிகள் தந்துள்ளனர்.

கூட்டம் ஓவர்
எல்லாம் முடிந்த பிறகு, அதிகாரிகளின் முன்னிலையில் சில தகவல்களை தங்களிடம் சொல்கிறேன் என்று அதிகாரிகள் சென்ற பின் ஸ்டாலினிடம் தனியாக சொன்ன துரைமுருகன்' தமிழகத்தில் உதயசூரியன் ஆட்சி நடக்கிறதா? அல்லது உதயசந்திரன் ஆட்சி நடக்கிறதா? என்றே தெரியவில்லை. அந்தளவுக்கு அதிகாரிகளின் ராஜ்ஜியம் நடக்கிறது. சூரியனா? சந்திரனா? என திமுகவில் பட்டிமன்றமே நடக்கிறது. அதிகாரிகளுக்கு கடிவாளம் போடப்பட வேண்டும் ' என்று தனது ஆதங்கத்தைக் கொட்டியிருக்கிறார்.

ஸ்டாலின் என்ன சொன்னார்
முதல்வர் ஸ்டாலினுக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. அதிகாரிகள் கிளம்பி சென்றதும், இது என்னுடைய கருத்து மட்டுமல்ல , அமைச்சர்கள் பலரின் கருத்தும் இதுவாகத்தான் இருக்கிறது " என்று ஆதங்கப்பட்டிருக்கிறார் துரைமுருகன். அதேபோல ஸ்டாலினுக்கு நெருக்கமான சிலரும் உதயச்சந்திரனை மாற்ற வேண்டும் என கோரிக்கையை கடந்த பல நாட்களாக தொடர்ந்து வைத்து வருகிறார்கள் என்று கூறப்படுகிறது.

விலக ரெடி
உதயசந்திரனும் கூட பொறுப்பிலிருந்து விலக ரெடியாக இருப்பதாகவே கூறப்படுகிறது. இதே கருத்தினை கடந்த மாதமும் ஸ்டாலினிடம் வலியுறுத்தியிருக்கிறார் துரைமுருகன். கடந்த மாதம் இது குறித்து அக்கறைக் காட்டாத ஸ்டாலின், தற்போது இதில் சீரியஸ் காட்டுவதாகவும் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் முதல்வருக்கு நெருக்கமான தரப்போ.. அதிகாரிகளுக்கு முதல்வர் சுதந்திரமாக செயல்பட அனுமதி கொடுக்கிறார். இதற்காக அதிகாரிகள்தான் ஆட்சி நடத்துகிறார்கள் என்று சொல்ல கூடாது. லகான் எப்போதும் முதல்வர் கையில்தான் இருக்கிறது. உதயசந்திரன் விவகாரத்தை தேவையின்றி சர்ச்சையாக்கி வருகிறார்கள் என்றும் கூறுகிறார்கள்.

மாற்றம்
இருப்பினும் விரைவில் முதல்வரின் செயலாளர்கள் உட்பட உயரதிகாரிகள் தரப்பில் சில அதிரடி மாற்றங்கள் நடக்கும் என்கிறார்கள். தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் குறித்த விவாதம் கடந்த சில நாட்களாவே நடந்து வந்தது. ஒரு சில வாரங்களுக்கு முன்பே ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றங்கள் மேற்கொள்ளப்படலாம் என்று கூறப்பட்டது.அதன்படியே நேற்று ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டனர். நேற்று தமிழ்நாட்டில் 35 க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டார். உள்துறை செயலளாராக பணீந்திர ரெட்டி நியமனம் செய்யப்பட்டார். இந்த நிலையில்தான் மீண்டும் இன்னொரு மாற்றம் நடக்கலாம் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications