துரையின் "துறை".. தங்கத்திடம் போகிறதாமே! கோட்டையில் பரபரப்பு! அவர் அறிவாரோ பராபரமே?
சென்னை: தமிழக அமைச்சரவையில் டி.ஆர்.பி.ராஜா இணைந்துள்ள நிலையில் நாளை அமைச்சரவையில் இலாகா மாற்றங்கள் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. அது போல் டி.ஆர்.பி. ராஜாவுக்கு எந்த துறை ஒதுக்கப்படுகிறது என்பது குறித்தும் தெரியவந்துள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்று இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்த நிலையில் ஏற்கெனவே இரு அமைச்சர்கள் சிவசங்கரன், ராஜ கண்ணப்பனின் துறைகள் மாற்றப்பட்டன. அது போல் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில் அமைச்சரவையில் இருவரை நீக்கிவிட்டு இலாக்காக்களில் லேசான மாற்றத்தை கொண்டு வரலாம் என முதல்வர் ஸ்டாலின் கருதியுள்ளார். அதன்படி கடந்த வாரம் அமைச்சரவைக் கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இதனால் யார் பதவி பறி போக போகிறது என அமைச்சர்கள் தங்களுக்குள் அஞ்சி கொண்டிருந்தனர். இந்த நிலையில் நேற்றைய தினம் அமைச்சர் துரைமுருகன் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்ததாக செய்திகள் வெளியாகின. ஆனால் இதை துரைமுருகன் மறுத்தார். அவர் கூறுகையில் அமைச்சரவை மாற்றம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. யாமறியேன் பராபரமே. முதல்வருக்கு தெரிந்த விஷயத்தை என்னிடம் கேட்டால் எப்படி, அவரிடம்தான் கேட்க வேண்டும் என தெரிவித்தார்.
இந்த நிலையில் தமிழக அமைச்சரவையில் இருந்து நாசர் நீக்கப்பட்டு டி.ஆர்.பாலு சேர்க்கப்படுகிறார் என்ற அறிவிப்பு நேற்று வெளியானது. பால்வளத் துறை அமைச்சராக உள்ள எஸ்.எம்.நாசர்தான் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதில் அமைச்சரவையில் சேர்க்கப்பட்ட டி.ஆர்.பாலுவின் மகன் டி.ஆர்.பி. ராஜா நாளை பதவியேற்கிறார். அவருக்கு என்ன மாதிரியான துறை ஒதுக்கீடு செய்யப்படும் என்பது தெரியவந்துள்ளது.
நாசர் நீக்கப்பட்டதால் பால் வளத் துறை அமைச்சர் பதவி ராஜாவுக்கு ஒதுக்கப்படும் என சொல்லப்பட்டது. ஆனால் அவருக்கு தொழில் துறை வழங்கப்படுகிறதாம். அது போல் தொழில் துறை வைத்திருந்த தங்கம் தென்னரசுவுக்கு நிதித் துறை மற்றும் மனித வள மேம்பாட்டுத் துறை வழங்கப்படுகிறதாம். அது போல் நிதி துறையை வைத்திருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு மனோ தங்கராஜ் வைத்திருந்த தகவல் தொழில்நுட்பத் துறை வழங்கப்படுகிறதாம். நாசர் வைத்திருந்த பால்வளம் மனோ தங்கராஜுக்கு வழங்கப்படுகிறதாம்.
இதில் டி.ஆர்.பி.ராஜா பதவியேற்றவுடன் உடனே இலாக்கா மாற்றம் குறித்து அறிவிப்பு வரும் என்கிறார்கள். இந்த நிலையில் துரைமுருகனிடம் உள்ள முக்கிய துறையான கனிம வளத் துறை தங்கம் தென்னரசுவிடம் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதை தவிர அமைச்சரவை இலாக்காவில் பெரிய மாற்றங்கள் ஏதும் இல்லை என்கிறார்கள்.
தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவியேற்று முதல் முறையாக அமைச்சரவையிலிருந்து நேற்றைய தினம் நீக்கம் நடந்துள்ளது. அதிலும் ஸ்டாலினின் உற்ற நண்பராக உள்ள நாசர் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டது கோட்டை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறதாம். சில நிர்வாகிகள் தங்கள் மகன், மருமகன்களிடம் நிலைமையை சொல்லி சிக்கலில் சிக்க வைத்துவிடாதீர்கள் என்றும் விடாபிடியாக சொல்லியுள்ளார்களாம்.
மேலும் இந்த நடவடிக்கையானது தனது தந்தை அமைச்சர், தனது தந்தை மாவட்டச் செயலாளர், தனது தந்தை திமுகவுக்கு நெருக்கமானவர் என கூறிக் கொண்டு கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டால் இதுதான் தண்டனை என்பதை பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே நாசரை கனத்த இதயத்துடன் நீக்கியதாக கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications