மிடில் கிளாஸுக்கு ஜாக்பாட்! சென்னையில் கே.கே.நகர், அம்பத்தூரில் வீடுகளின் விலை குறைகிறதா?
சென்னை: சென்னையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் கட்டப்பட்ட வீடுகள் பல விற்பனையாகாமல் உள்ள நிலையில் தனியார் கட்டுமான நிறுவனத்தின் உதவியை தமிழக அரசு நாடியுள்ளது. எனவே வீட்டின் விலை குறைய வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.
எலி வலையானாலும் தனி வலை வேண்டும் என்பார்கள். சம்பாதிப்பதில் 20 சதவீதமாவது சேர்த்து வைக்க வேண்டும் என்ற அறிவுறுத்தல்கள் உள்ளன. இந்த 20 சதவீதத்தில் பொன்னாகவும் மண்ணாகவும் சேர்த்து வைக்கலாம். மற்றபடி கார், பைக் எல்லாம் சேமிப்பாக இருக்குமா என்றால் கிடையாது என்பதுதான் பதிலாக இருக்கும்.

காரோ, பைக்கோ ஷோரூமை விட்டு வெளியே வந்துவிட்டாலே அது பழைய காராகிவிடுகிறது. ஆனால் தங்க நகை மீது நாளுக்கு நாள் மதிப்பு ஏறிக் கொண்டே இருக்கிறது. அது போல் நிலம், காலி மனை, தோப்பு வாங்கினாலும் நம் முதலீடு சில மடங்கு அதிகரித்து நமக்கு லாபத்தை தரும் என்பதில் சந்தேகம் இல்லை.
அது போல் சிலர் வீடு கட்டுகிறார்கள். இல்லாவிட்டால் கட்டிய வீட்டை வாங்குகிறார்கள். இதுவும் சரியாக பொருளாதார நிபுணர்களின் அறிவுறுத்தல்கள், ஆலோசனையுடன் வாங்கினால் லாபம்தான். அதிலும் தனியார் வீடுகளை விட தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் கட்டித் தரும் வீடுகளை வாங்குவது பாதுகாப்பானதாகவும் விலை குறைவாகவும் இருப்பதால் அதை வாங்க மக்கள் விரும்புகிறார்கள்.
ஆனால் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வீடு வாங்க, முதலில் விண்ணப்பித்து, எல்லா விண்ணப்பங்களும் வந்து சேர்ந்தவுடன் மக்கள் முன்னிலையில் குலுக்கல் நடைபெறும். அதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்ப எண்களுக்கே வீடுகள் ஒதுக்கப்படும். இதில் சிலருக்கு கிடைக்கும். பலருக்கு கிடைக்காது.
இதனால் வீட்டை வாங்க தனியார் நிறுவனத்தை நாடுகிறார்கள். இந்த நிலையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் கட்டிய வீடுகள் விற்பனையாகாமல் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. தமிழகம் முழுவதும் சுமார் 4,753 அடுக்குமாடி குடியிருப்புகள் விற்பனை செய்யப்படாமல் உள்ளன. சென்னையில் மட்டும் 4,279 அடுக்குமாடி குடியிருப்புகளும், பிற மாவட்டங்களில் 474 அடுக்குமாடி குடியிருப்புகளும் உள்ளன.
குறிப்பாக சென்னையில் சோழிங்கநல்லூர், அம்பத்தூர், கே.கே.நகர், ஜாபர்கான்பேட்டை, செனாய் நகர் போன்ற இடங்களில் கட்டப்பட்ட ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் இன்றும் விற்பனையாகாமல் உள்ளன. இதற்கு காரணம் அதிக விலை நிர்ணயம் என சிலர் கூறுகிறார்கள். மேலும் வங்கிக் கடனுக்கான வட்டியும் அதிகமாக இருப்பதால் மக்கள் வீட்டை வாங்க ஆர்வம் காட்டுவதில்லை என சொல்கிறார்கள்.
இதனால் அந்த வீடுகளை விற்பனை செய்ய தனியார் கட்டுமான நிறுவனங்கள் பின்பற்றுவதை போல் மார்கெட்டிங் ஏஜென்சி மூலம் விற்பனை செய்ய துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் பூச்சி முருகன் தெரிவித்துள்ளார். மேலும் வாரிய கூட்டத் தீர்மானத்தின்படி விற்பனையாகாத வீடுகளை பரிசீலனை செய்து விலை குறைப்பு செய்வதற்கு உயரதிகாரிகள் கொண்ட குழு ஏற்படுத்தப்படும் என தெரிகிறது. இதனால் சென்னையில் வீடுகளின் விலை குறைய வாய்ப்புள்ளது.
அனைவருக்கும் வீடு என்ற இலக்குடன் உருவாக்கப்பட்டதுதான் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம். அதாவது பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினர்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களும் தங்களுக்கான கனவு இல்லத்தை வாங்க வைப்பதே இந்த வாரியத்தின் இலக்காகும். ஏழை, எளிய மக்கள் வாங்கும் வகையில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.












Click it and Unblock the Notifications