சசிகலா சித்ரவதை, தற்கொலை எண்ணம், எல்லாம் மறந்துவிட்டதா? ஓபிஎஸ்க்கு நினைவூட்டிய மாவட்டச் செயலாளர்!
சென்னை : அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் இது மாதிரி பேசுவது மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது என்று தொண்டர்கள் சொல்கிறார்கள். சசிகலாவை கட்சியில் இணைக்க கண்டிப்பாக ஓபிஎஸ் தயாராக இருக்க மாட்டார் என்று நாங்கள் நம்புகிறோம் என தென் சென்னை மாவட்ட அதிமுக செயலாளர் ஆதிராஜாராம் தெரிவித்துள்ளார்.
அவர்கள் கொடுத்த சித்ரவதையில் நான் தற்கொலையே பண்ணி விடலாமோ என்ற எண்ணமே எனக்கு வந்தது என்று ஓபிஎஸ் சொல்லியிருக்கிறார். ஆகவே, அவர் இதை மாதிரி செய்ய மாட்டார் என்று நம்புகிறோம் என்றும் ஆதிராஜாராம் கூறினார்.
சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்து கட்சி தலைமை கழக நிர்வாகிகள் முடிவு செய்வார்கள் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அளித்த பேட்டி அதிமுக வட்டாரத்தில் புயலை கிளப்பி உள்ளது.

ஜெயக்குமார்
இதை சற்றும் எதிர்பார்க்காத எடப்பாடி பழனிசாமி தரப்பு அதற்கு கடும் எதிர்வினை ஆற்றி வருகிறது. எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து துணை ஒருங்கிணைப்பாளர் கேபிமுனுசாமி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்பட பலரும் சசிகலாவை சேர்க்கக்கூடாது என்று எதிர்வினை ஆற்றி வருகிறார்கள்.

ஓபிஎஸ் பேச்சு
இதனிடையே தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட அதிமுக செயலாளர் ஆதிராஜாராம், ஓபிஎஸ் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறும் போது, " அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை நடத்துவதற்காக நம்மால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள் தான் ஒருங்கிணைப்பாளர்கள். அவர்களின் முடிவை நம்மீது திணிக்க கூடாது. நம்முடைய முடிவை தான் அவர்களிடம் சொல்ல வேண்டும். சசிகலாவுக்கு இடம் இல்லை என்பதை அழுத்தம் திருத்தமாக ஓபிஎஸ் சொல்ல வேண்டும்.

அரசியல் நாகரீகம்
ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். பத்திரிகையாளர்களுக்கு சில விஷயங்களை போற போக்கில் சொல்லிவிட்டு போய் இருப்பார். கண்டிப்பாக சசிகலாவை அதிமுகவில் கடைசி தொண்டன் இருக்கும் வரை ஓபிஎஸ் எதிர்ப்பார். அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ் இணைந்தபோது, டி.டி.வி.தினகரனை ரகசியமாக போய் சந்தித்தார். அவர் சந்தித்ததை அரசியல் நாகரீகம் என்று கூட தெரியாமல் அதனை பொதுவெளியில் டி.டி.வி.தினகரன் போட்டு உடைத்தார்.

சசிகலா ஆடியோ நாடகம்
இப்படிப்பட்ட ஒரு அனுபவம் ஓபிஎஸ்க்கு உள்ளது. எனவே சசிகலா டூர் போகும் நேரத்தில், இதுபோன்று குழப்பங்கள் உருவாக கூடாது. சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கியது தலைமை கழகத்தில் எல்லாரும் சேர்ந்து எடுத்த முடிவு. அவர்களுடன் தொடர்புடையவர்கள் எல்லோரையும் கட்சியை விட்டு நீக்கிவிட்டோம். சசிகலா ஆடியோ நாடகம் எல்லாம் போட்டாங்க. அதுக்கு அப்புறம் டூர் போறோம் என்கிறாங்க. அவர் பொது செயலாளர் என்று போட்டதற்காக வழக்கு போடப்பட்டுள்ளது.

சித்ரவதை
இந்த நிலையில் ஒருங்கிணைப்பாளர் இது மாதிரி பேசுவது மிகுந்த மன வருத்தத்தை அளிப்பதாக தொண்டர்கள் வேதனையில் உள்ளனர். சசிகலாவை அதிமுகவில் இணைக்க கண்டிப்பாக ஓபிஎஸ் தயாராக இருக்க மாட்டார் என்று நாங்கள் நம்புகிறோம். ஏனென்றால், அவரே சசிகலாவிற்கு எதிராக தர்மயுத்தம் நடத்தினார். அப்போது ஓபிஎஸ் கூறும் போது, அவர்கள் கொடுத்த சித்ரவதையில் நான் தற்கொலையே பண்ணி விடலாமோ என்ற எண்ணமே எனக்கு வந்தது என்று சொல்லியிருக்கிறார். ஆகவே, அவர் இது மாதிரி செய்ய மாட்டார் என்று நம்புகிறோம்.

18 எம்எல்ஏக்கள் கதி
அதிமுக ஆட்சியில் இருக்கும் போது சசிகலா மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் பேச்சை கேட்டு 18 எம்எல்ஏக்கள் போனார்கள். அவர்கள் நிலைமை இன்று என்ன ஆனது. ஆட்சியில் இருக்கும் போதே சின்னாபின்னமாகி விட்டார்கள். அவர்களுக்கே அந்த கதி என்றால், அவர்களை ஏற்றுக் கொண்டால், அவர்களை எதிர்த்த நம்மை எல்லாம் எந்த அளவுக்கு சித்ரவதை செய்வார்கள். கண்டிப்பாக எல்லா மாவட்டங்களிலும் சசிகலாவுக்கு எதிராக தான் தொண்டர்களின் கருத்து வரும். இதில் எந்த மாற்று கருத்தும் வராது" இவ்வாறு ஆதிராஜாராம் கூறினார்.












Click it and Unblock the Notifications