ஒளிர்ந்த புள்ளி! நிலவில் விக்ரம் லேண்டர் இறங்கிய இடம் இதுதான்! கண்டுபிடித்த தென்கொரியா ஆர்ப்பிட்டர்
சென்னை: நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக முதல் கட்ட ஆய்வை முடித்துள்ளது. இந்நிலையில் தான் நிலவில் சந்திரயான்3 விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடத்தை தென்கொரியாவின் தனுரி ஆர்ப்பிட்டர் கண்டுபிடித்து போட்டோ எடுத்துள்ளது.
நிலவில் ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு பிறகு கால்பதித்த 4வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இந்த பெருமையை இந்தியாவுக்கு சந்திரயான்-3 விண்கலம் தான் நமக்கு தேடிதந்துள்ளது. அதாவது நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய இஸ்ரோ விஞ்ஞானிகள் சந்திரயான் -3 விண்கலத்தை விண்ணில் செலுத்தினர்.

கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி இந்த விண்கலம் விண்ணில் பாய்ந்தது. அதன்பிறகு ஆகஸ்ட் மாதம் 17 ம் தேதி ப்ரோபல்சன் மாடூலில் இருந்து விக்ரம் லேண்டர் தனியாக பிரிந்தது. அதன்பிறகு ஆகஸ்ட் 23ம் தேதி மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. விக்ரம் லேண்டரை இஸ்ரோ விஞ்ஞானிகள் நிலவின் தென்துருவத்தில் ‛சாப்ட் லேண்டிங்' முறையில் வெற்றிகரமாக தரையிறக்கி அசத்தினர்.
அதன்பிறகு விக்ரம் லேண்டர் மற்றும் விக்ரம் லேண்டரில் இருந்து வெளியே வந்த ரோவர் உள்ளிட்டவை நிலவின் தென்துருவத்தில் ஆய்வு செய்ய தொடங்கின. இந்த வேளையில் நிலவில் ஆக்சிஜன், சல்பர், அலுமினியம், அயர்ன் உள்பட 8 வகையான தனிமங்கள் இருப்பதை உறுதி செய்தது. இதையடுத்து நிலவின் தென்துருவத்தில் இருள் சூழ்ந்தது. 14 நாட்கள் நிலவின் தென்துருவத்தில் இருள் நீடிக்கும் என்பதால் ரோவர், விக்ரம் லேண்டரின் செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வரும் 22ம் தேதி மீண்டும் ரோவர், விக்ரம் லேண்டர் மீண்டும் செயல்பாட்டுக்கு திரும்பும் என இஸ்ரோ நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தான் நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டர் தரையிறங்கிய பகுதியை தென்கொரியாவின் தனுரி ஆர்பிட்டர் போட்டோவாக எடுத்துள்ளது. நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடத்துக்கு பிரதமர் மோடி ‛சிவசக்தி' என பெயரிட்டுள்ள நிலையில் அந்த புள்ளியை தான் தற்போது தென்கொரியாவின் ஆர்ப்பிட்டர் போட்டோ எடுத்துள்ளது.

இதுபற்றி தென்கொரியா சார்பில், ‛‛நிலவுக்கான தனுரி ஆர்ப்பிட்டர் என்பது சந்திரயான்-3 விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய இடத்தை போட்டோவாக எடுத்துள்ளது. இந்த போட்டோ என்பது ஆகஸ்ட்28 ம் தேதி எடுக்கப்பட்டுள்ளது'' என தெரிவிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தனுரி ஆர்ப்பிட்டர் என்பது 2022 ஆகஸ்ட் மாதம் விண்ணில் செலுத்தப்பட்டது. அதே ஆண்டு அக்டோபர் மாதம் நிலவின் சுற்று வட்டாபாதையில் நுழைந்தது. இதில் உயர் திறன் கொண்ட கேமரா, ஸ்பெக்ட்ரோமீட்டர், காந்தமானி உள்பட பல கருவிகள் உள்ளன. தற்போது இந்த ஆர்ப்பிட்டர் நிலவின் சுற்றுவட்டபாதையில் சுற்றி வந்து நிலவு குறித்த போட்டோக்களை எடுத்து அந்நாட்டு விண்வெளி ஆய்வு மையங்களுக்கு அனுப்பி வைக்க உள்ளது. இது ஒருபுறம் இருக்க விரைவில் தென்கொரியா சார்பில் நிலவில் கால்பதிக்கும் வகையில் ரோவர் அனுப்பி வைக்கப்பட உள்ளது.
இதற்கு முன்பு அமெரிக்காவின் நாசா ஆர்ப்பிட்டர் சந்திரயான்-3 விக்ரம் லேண்டர் தரையிறங்கியதை போட்டோவாக எடுத்துள்ளது. அதாவது நாசாவின் லூனார் ரீகனைசென்ஸ் ஆர்பிட்டர் (எல்ஆர்ஓ) நிலவின் மேல் பரப்பில் இருந்து சந்திரயான் -3 லேண்டரின் புகைப்படத்தை எடுத்து அனுப்பியிருந்தது. அதேபோல் தற்போது தென்கொரியாவின் தனுரி ஆர்ப்பிட்டர் சந்திரயான் - 3 லேண்டரின் படத்தை எடுத்து அனுப்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications