தென் தமிழகத்தில் 48 மணிநேரத்திற்கு மழை இருக்கு... வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை: தென் தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக அவ்வப்போது மழை பெய்து வந்தது. தற்போது, மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் பரவலாக மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், அடுத்த இரண்டு நாட்களுக்கு தென் தமிழகத்தில் மிதமான மழை தொடரும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவாரூர், நாகை, கடலூர் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் காலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
இதனிடையே, நெல்லை பழைய குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றம் காரணமாக காலையில் மூடுபனி நிலவி வருவதால், சாலையோரங்களில் ஆங்காங்கே நெருப்பை மூட்டி மக்கள் குளிர்காய்ந்து வருகின்றனர். வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டாறு செல்கின்றனர்.












Click it and Unblock the Notifications