ஓட்டு போட சொந்த ஊர் போனவங்களுக்கு வந்த குட்நியூஸ்.. சென்னைக்கு இன்று முன்பதிவில்லா ஸ்பெஷல் ரயில்
சென்னை: லோக்சபா தேர்தல் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இந்த நிலையில், சொந்த ஊர் சென்ற பயணிகள் சென்னை திரும்ப ஏதுவாக மறுமார்க்கத்தில் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்து வருகிறது.
தமிழகத்தில் லோக்சபா தேர்தலில் வாக்களிக்க செல்ல வசதியாக சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பேருந்துகள், ரயில்கள் இயக்கப்பட்டன. வெள்ளிக்கிழமை மற்றும் வார விடுமுறை என்பதால் வெளியூர் செல்லும் பேருந்து ரயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. ரயில்களில் கூட பயணிகள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது.

தூத்துக்குடி - சென்னை: சென்னையில் திருச்சி, மதுரை, நெல்லை உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டியில் கால் வைக்க கூட இடம் இல்லாத அளவுக்கு பயணிகள் கூட்டம் இருந்தது. பல ரயில்களில் முன்பதிவு செய்த பெட்டிக்குள் பயணிகள் பலரும் அத்துமீறி ஏறியதாக புகார்களும் வெளியாகின. வியாழக்கிழமை இரவு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலும் காணும் இடமெல்லாம் பயணிகள் கூட்டமாக இருந்தது.
முன்பதிவில்லா சிறப்பு ரயில்: பேருந்து வசதி முறையாக இல்லை என்று நள்ளிரவில் பயணிகள் போராட்டத்திலும் குதித்தனர். வாக்களிக்க சொந்த ஊர் சென்ற மக்கள் இனி சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அந்த வகையில், தூத்துக்குடியில் இருந்து இன்று இரவு சென்னை சென்ட்ரலுக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
நின்று செல்லும் இடங்கள்: இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இன்று மாலை 4.30 மணிக்கு தூத்துக்குடி ரயில் நிலையத்தில் சென்னை சென்ட்ரலுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும். முழுவதும் முன்பதிவு இல்லாத பெட்டிகளை கொண்ட இந்த ரயில், கோவில்பட்டிக்கு 5.30 மணிக்கு வந்து சேரும்.
எழும்பூர் சென்று சென்டிரல் செல்லும்: இரண்டு நிமிடங்கள் கோவில்பட்டியில் நிற்கும். சாத்தூர், விருதுநகர் வழியாக மதுரைக்கு 7.20 மணிக்கு வந்து சேரும். 7.25க்கு மதுரையில் இருந்து புறப்படும் இந்த ரயில், திண்டுக்கல் வழியாக திருச்சிக்கு இரவு 10.15 மணிக்கு வரும்.
திருச்சியில் இருந்து 10.20 மணிக்கு புறப்படும் ரயில், ஸ்ரீரங்கம், அரியலூர், விருதாச்சலம், விழுப்புரம், திண்டிவனம், மேல் மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக சென்னை எழும்பூருக்கு மறுநாள் அதிகாலை 3.50 மணிக்கு வந்து சேரும். எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து 3.55 மணிக்கு புறப்பட்டு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அதிகாலை 4.45 மணிக்கு வந்து சேரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications