பாம்பன் ரயில்வே பாலம் தரமற்ற வகையில் கட்டப்பட்டதா? தெற்கு ரயில்வே பரபர விளக்கம்!
சென்னை: பாம்பன் பாலம் கட்டுமானம் தொடர்பாக தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. புதிய ரயில் பாலத்தை ஆய்வு செய்து சென்னை மற்றும் மும்பை ஐ.ஐ.டி.களின் நிபுணர்கள் தர மதிப்பீடு வழங்கியுள்ளனர். பாலிசிலோக்சேன் பெயிண்ட் பயன்படுத்தியதால் 35 வருடங்களுக்கு உப்பு அரிப்பு பிரச்சனை இருக்காது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள பாம்பன் பாலம், இந்தியாவின் முதல் செங்குத்து லிப்ட் பாலம் என்ற பெருமை கொண்டது. பாம்பன் ரயில் பாலம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் புதிய பாம்பன் ரயில் பாலம் கட்டுவதற்கு ரூபாய் 550 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. கட்டுமான பணிகள் 2020ல் தொடங்கிய நிலையில் சமீபத்தில் முழுவதுமாக முடிவடைந்து கடந்த அக்டோபர் முதல் சோதனை ஓட்டம் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் பாம்பன் பாலத்தின் தரம் குறித்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி வெளியிட்ட ஆய்வறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த அறிக்கையின்படி, புதிதாக கட்டப்பட்ட பாம்பன் ரயில் பாலத்தில் கடல்நீர் அரிப்பு பிரச்சனையை தீர்க்க முறையான நடவடிக்கை இல்லை. தூண்களில் தற்போதே அரிப்பு தொடங்கியுள்ளது, சோதனை ஓட்டத்தில் தண்டவாளத்தில் அதிக ஒலி உள்ளிட்ட பல பிரச்சனைகள் உள்ளன. புதிய பாலத்தில் குறைகளை மறு ஆய்வு செய்து சரி செய்ய வேண்டும் என பரிந்துரைத்துள்ளார்.
புதிய பாம்பன் பாலம் தரமானதாக கட்டப்படவில்லை என பாதுகாப்பு ஆணையர் அறிக்கை அளித்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட சர்ச்சை தொடர்பாக விசாரணை நடத்த 5 பேர் கொண்ட தொழில்நுட்பக் குழுவை ரயில்வே வாரியம் அமைத்துள்ளது. ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் பரிந்துரை மற்றும் கருத்து தொடர்பாக இந்தக் குழு விசாரணை மேற்கொள்ள உள்ளது.
இந்நிலையில், பாம்பன் பாலம் கட்டுமானம் தொடர்பாக தெற்கு ரயில்வே தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதிநவீன வடிவமைப்பு மற்றும் சிறந்த கட்டுமான நடைமுறைகளுடன் பாலம் கட்டப்பட்டுள்ளது என்றும் புகழ்பெற்ற சர்வதேச ஆலோசகரின் முறையான ஆய்வின் அடிப்படையில் பாம்பன் பாலம் கட்டப்பட்டு வருவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாம்பன் புதிய ரயில் பாலத்தை சென்னை, மும்பை ஐஐடி நிபுணர்கள் ஆய்வு செய்து தரமதிப்பீடு வழங்கினர். பாம்பன் ரயில் பாலம் தரமான வடிவமைப்போடு கட்டப்பட்டுள்ளதாக ஐஐடி நிபுணர்கள் தெரிவித்தனர். பாலத்தின் இணைப்பு வெல்டிங் தர சோதனை 100 சதவீதம் சரிபாக்கப்பட்டுள்ளது.
பாலிசிலோக்சோன் பெயிண்ட் பயன்படுத்தியதால் 35 ஆண்டுகளுக்கு உப்பு அரிப்பு பிரச்சனை இருக்காது. பாதுகாப்பு ஆணையர் அதிருப்தி தெரிவித்த சில காரணிகளுக்கு தீர்வு காணப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications