ரயில்வே பணியில் சேர படித்து வருகிறீர்களா?.. 'உஷாரா இருங்க'.. தெற்கு ரயில்வேயின் முக்கிய அறிவிப்பு!
சென்னை: ரயில்வே பணிகளில் சேர விரும்புபவர்கள் இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்று தெற்கு ரயில்வே கூறியுள்ளது. குறுக்கு வழியில் பணியில் சேர்ந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்திய அரசின் மிகப்பெரும் பொதுத்துறை நிறுவனம் ரயில்வே ஆகும். சுமார் 4 மில்லியனுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்திய ரயில்வேயில் வேலை பார்த்து வருகின்றனர். 'நாமும் ரயில்வே பணியில் சேர வேண்டும்' என்ற ஆசையில் இதற்காக உயிரை கொடுத்து படித்து கொண்டிருப்பவர்கள் ஏராளம்.
பொருளாதார நெருக்கடியில் இலங்கை- வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல். பீரிஸ் இன்று இந்தியா வருகை
லட்சக்கணக்கில் பணம் கறக்கும் ஏமாற்று பேர்வழிகள்
பல மாதங்களாக இதற்காக தங்களை அர்ப்பணித்து அவர்கள் ரயில்வே தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள். ஆனால் சில மோசடி கும்பல் இவர்களில் ஒரு சிலரிடம் '' நான் உங்களை ரயில்வே வேலைக்கு சேர்த்து விடுகிறேன்'. இவ்வளவு பணம் கொடுங்கள்'' என்று லட்சக்கணக்கில் பணம் கறந்து ஏமாற்றி விடுகின்றனர். இப்படி ஏமாறும் நபர்களுக்காகவே தெற்கு ரயில்வே தற்போது முக்கிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
தேர்வு மூலமாக மட்டுமே ஆட்கள் தேர்வு
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், ' ரயில்வே பணிகளில் சேர விரும்புபவர்கள் அதிகாரப்பூர்வமற்ற விளம்பரங்கள் மற்றும் இடைத்தரகர்களை நம்பி, பணம் கொடுத்து ஏமாந்து போவதான செய்திகள், ரயில்வே நிர்வாகத்தின் கவனத்துக்கு வந்துள்ளன. ரயில்வே பணிகளில் சேர அதிகாரப்பூர்வ ரயில்வேபணியாளர் தேர்வாணையம் (ஆர்ஆர்பி) மற்றும் ரயில்வே பணியாளர் தேர்வு முகமை (ஆர்ஆர்சி) ஆகியவற்றின் வாயிலாக மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
இப்படிதான் விண்ணப்பிக்கணும்
ரயில்வே துறைக்கு பணியாளர்களை தேர்வு செய்ய எம்பிளாய்மெண்ட் நியூஸ், ரோஜ்கார் சமாச்சார் போன்ற அரசு வெளியீடுகளிலும், பிரபல தேசிய, உள்ளூர் நாளிதழ்களில் இணையதள விவரங்களுடனும் அதிகாரப்பூர்வ ரயில்வே இணையதளங்களிலும் வேலைவாய்ப்பு விளம்பரங்கள் வெளியிடப்படுகின்றன.விண்ணப்பங்களை அதிகாரப்பூர்வ தேர்வாணைய இணையதளம் வாயிலாக அனுப்பலாம்.
Recommended Video
உஷாராக இருக்கணும்
ரயில்வே போட்டித் தேர்வுகள் முழுமையாக கணினிமயமாக்கப்பட்டுள்ளது. தகுதி அடிப்படையிலேயே பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். எனவே ரயில்வே பணியில் சேர விரும்புபவர்கள் இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். விண்ணப்பதாரர்கள் குறுக்கு வழியில் பணியில் சேர்ந்தது தெரிய வந்தால் அவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவது மட்டுமல்லாமல் சட்டப்பூர்வ நடவடிக்கைக்கும் ஆளாக நேரிடும்' என்று கூறப்பட்டுள்ளது.