பாண்டியன் ரயில் பிடிக்க.. தாம்பரம் போகனுமா? கொந்தளித்த பயணிகள்! அறிவிப்பை வாபஸ் பெற்ற தெற்கு ரயில்வே
சென்னை: எழும்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் சென்னை - மதுரை பாண்டியன் உட்பட 3 விரைவு ரயில்கள் எழும்பூருக்கு பதிலாக தாம்பரத்திலிருந்து இயக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியிருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், தற்போது இந்த அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டிருக்கிறது.
நூற்றாண்டு பழமையான எழும்பூர் ரயில் நிலையம் தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பராமரிப்பு பணிகளுக்காக சில ரயில்கள், எழும்பூருக்கு பதிலாக தாம்பரத்திலிருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தன. குறிப்பாக டெல்டா மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் தாம்பரத்திலிருந்து இயக்கப்பட்டன.

மன்னார்குடி எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், காரைக்கால் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் தாம்பரத்திலிருந்து இயக்கப்பட்டன. எனவே பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினார்கள். குறிப்பாக திருவொற்றியூர், அம்பத்தூர், ரெட்ஹில்ஸ் போன்ற பகுதியிலிருந்து ரயிலை பிடிக்க வரும் பயணிகள், தாம்பரம் வரை பயணிக்க வேண்டும் என்பதால் ரயிலை தவிர்த்துவிட்டு கூடுதல் கட்டணம் கொடுத்து பேருந்தில் பயணித்தனர்.
இதனால் தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட்ட ரயில்கள் பயணிகள் என்று வெறிச்சோடி காணப்பட்டது. தற்போது மன்னார்குடி எக்ஸ்பிரஸ் மட்டும் எழும்பூரில் இருந்து இயக்கப்படுகிறது. மற்ற இரண்டு ரயில்களும் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. அதேபோல பராமரிப்பு பணிகள் காரணமாக வேறு சில ரயில்களும் தாம்பரத்திலிருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டன.
எழும்பூர் - திருச்சி ராக்போர்ட் (12654/ 12653)
எழும்பூர் - மதுரை பாண்டியன் (12638)
எழும்பூர் - திருச்சி சோழன் (22675)
எழும்பூர் - ராமேஸ்வரம் சேது(22661/ 22662)
எழும்பூர் - ராமேஸ்வரம்(16751 / 16752)
ஆகிய விரைவு ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட உள்ளதாகவும், இந்த மாற்றம், செப்.10 முதல் நவம்பர் 10 ஆம் தேதி வரை இருக்கும் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். ஆனால் தென்மாவட்ட மக்கள் இந்த அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே, இந்த அறிவிப்பு வாபஸ் பெறப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்திருக்கிறது.
அதன்படி, எழும்பூர் - திருச்சி ராக்போர்ட் (12654/ 12653), எழும்பூர் - மதுரை பாண்டியன் (12638), எழும்பூர் - திருச்சி சோழன் (22675) என மூன்று ரயில்கள் மட்டும் எழும்பூரிலிருந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications