தென்மேற்குப் பருவக்காற்று...5 நாட்களுக்கு தமிழகத்தில் சாரல் மழை - வானிலையின் அசத்தல் அறிவிப்பு
தென்மேற்கு பருவக்காற்று காரணமாக இன்று முதல் வருகின்ற 11ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை: தமிழ்நாட்டில் பருவமழை விட்டு விட்டு பெய்து வரும் நிலையில் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக இன்று முதல் வருகின்ற 11ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. செப்டம்பர் வரை பருவமழைக் காலம் என்பதால் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் பெய்து வரும் மழையால் கோவை, நீலகிரி, தேனி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. திடீர் மழையால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. அணைகள் நிரம்பியுள்ளதால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.

பல மாவட்டங்களில் பகல் நேரங்களில் வெயிலடித்தாலும் மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று மாலையில் பல பகுதிகளில் மழை பெய்தது. கடந்த 24 மணிநேரத்தில் சோழிங்கநல்லூர், அம்பத்தூரில் 4 செமீ மழை பதிவாகியுள்ளது. அண்ணநகர், நுங்கம்பாக்கம், டிஜிபி அலுவலகம், பெரம்பூர்,ஆலந்தூர், வால்பாறையில் திருவாலங்காடு உள்ளிட்ட பல ஊர்களில் 3 செமீ அளவுக்கு மழை பதிவாகியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பெய்த கனமழையால், நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. இதே போல பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் மழையால், பரம்பிக்குளம் அணை முழு கொள்ளளவான 72 அடியை எட்டியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான வைத்தீஸ்வரன் கோவில், கொள்ளிடம், பூம்புகார், திருவெண்காடு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. அரியலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான தாமரைக்குளம், ஓட்டக்கோவில், செந்துறை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.
புதுச்சேரியில் காலாப்பட்டு, அரியாங்குப்பம், தவளகுப்பம், மடுகரை உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் பெய்த கனமழையால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி, வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் இன்று முதல் 11ஆம் தேதி வரைக்கும் தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.
இன்று முதல் வருகின்ற 11ம் தேதி வரை மன்னார் வளைகுடா பகுதி,மத்திய வங்கக் கடல், தெற்கு வங்கக்கடல்,தென் கிழக்கு, மத்திய வங்கக் கடல் ,தெற்கு அந்தமான் கடல் பகுதி, தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் ஆகிய பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளில் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications