தென்மேற்குப் பருவமழை தீவிரம்.. நீலகிரி, கோவையில் கனமழை - அரபிக்கடலில் பலத்த காற்றும் வீசும்
சென்னை: தென்மேற்குப் பருவமழை கேரளாவிலும் தமிழகத்திலும் தீவிரமடைந்துள்ள நிலையில் இன்னும் 2 நாட்களுக்கு கோவை, நீலகிரியில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்தாலும் மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மேல் பவானியில் 11 செமீ மழை பெய்துள்ளது. அவலாஞ்சியில் 8 செமீ மழையும் சின்னக்கல்லார், தேவலா பகுதியில் 6 செமீ மழையும் பெய்துள்ளது.
பந்தலூரில் 5 செமீ, வால்பாறையில் 4 செமீ பெரியாறில் 3 செமீ மழை பதிவாகியுள்ளது, பொள்ளாச்சியில் 2 செமீ மழையும் தென்பரநாடு, தேக்கடியில் தலா 1 சென்டி மீட்டர் மழை அளவும் பதிவாகியுள்ளது.
மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தென் மேற்கு பருவ காற்றின் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இடியுடன் கனமழை
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
மிதமான மழை
நாளைய தினம் 16ஆம் தேதி நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன மழையும், எஞ்சிய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
வறண்ட வானிலை
ஜூன் 17, 18 ஆகிய தேதிகள்: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
சென்னையில் மழை
ஜூன் 19ஆம் தேதி: கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
மீனவர்களுக்கு அறிவிப்பு
இன்றும் நாளையும் மன்னார் வளைகுடா மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இன்று முதல் ஜூன் 18ஆம் தேதி வரை கேரளா, கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இன்று முதல் ஜூன் 19ஆம் தேதி வரை தென் மேற்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றும் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.