மக்களே... மகிழ்ச்சியான செய்தி! தென்மேற்குப் பருவமழை சீக்கிரமே ஆரம்பிக்கப்போகுதாம்... என்ஜாய்!!
இந்தியாவில் நடப்பாண்டு தென்மேற்குப் பருவமழை முன்கூட்டியே தொடங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சென்னை: தென் மாவட்டங்களில் அதிக மழை பொழிவைத் தரக்கூடிய தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே அதாவது நாளை மறுநாள் 15ஆம் தேதி தொடங்க வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
மே 4ஆம் தேதி தொடங்கி அக்னி நட்சத்திரம் மே 28ஆம் தேதி வரை இருக்கும் என்பதால் மிகப்பெரிய அளவில் அனல் காற்று வீசும் எனவும், இதனால் அதிக அளவில் வெப்பம் இருக்கும் எனவும் ஏற்கனவே கூறப்பட்டு இருந்தது.
கடந்த வாரம் முழுவதும் அசானி புயல் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உட்பட பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால், குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில் தென்மேற்குப் பருவமழை இன்னும் சில நாட்களில் தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளது.
Recommended Video
தென்மேற்கு பருவமழை, இந்தியாவில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய 4 மாதங்களில் பெய்யும் பருவமழையாக உள்ளது. இந்த பருவ காலத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உட்பட தென் மாநிலங்களில், ஒவ்வொரு ஆண்டும் நல்ல மழை பெய்யும். இதனால், நீர்நிலைகள் நிரம்பும்.
வானிலையில் நடந்த அதிசயம்.. முன்கூட்டியே வருகிறது தென்மேற்கு பருவமழை.. எப்படி தெரியுமா?
தென்மேற்குப் பருவமழை
தென்மேற்குப் பருவக்காற்று தேனிப்பக்கம் வீசும் போது சாரல்.... என்ற அழகான பாடலைப் போல இந்தாண்டு தென்மேற்கு பருவமழை அந்தமான்-நிகோபார் தீவுகளில் மே 15ஆம் தேதியே தொடங்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மே 15ஆம் தேதியே தென்மேற்கு பருவமழை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் தொடங்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
முன்கூட்டியே தொடங்கும் பருவமழை
தமிழகத்தில் ஜூன் முதல் செப்டம்பர் முடிய தென்மேற்குப் பருவமழை காலமாகும். அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்குப் பருவமழைக்காலமாகும். வழக்கமாக மே 20ஆம் தேதி அந்தமானில் தென்மேற்குப் பருவமழை தொடங்கும். கேரளாவில் ஜூன் 1ஆம் தேதி பருவமழை ஆரம்பிக்கும். இந்த ஆண்டு முன்கூட்டியே பருவமழை தொடங்கும் என்ற மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
தமிழகம் கேரளாவில் மழை எப்போது?
மே 15ஆம் தேதி அந்தமானில் ஆரம்பிக்கும் தென்மேற்குப் பருவமழை படிப்படியாக வலுவடைந்து மே கடைசி வாரத்திற்குள் கேரளா, தமிழகத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாக வானிலை மைய ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். கடந்த ஆண்டு பருவமழை அபரிமிதமாக பெய்தது. நீர் நிலைகள் நிரம்பி வழிந்தன. ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இந்த ஆண்டு மழை இயல்பான அளவாகவோ இயல்பை விட அதிகமாகவே இருக்கும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
5 நாட்களுக்கு மழை
மேலும், அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், 13, 14 தேதிகளில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், இந்த ஆண்டு அக்னி நட்சத்திரத்தின் அசுரப்பிடியில் மக்கள் தப்பித்துக் கொள்வார்கள் என எதிர்பார்க்கலாம்.