A4 மற்றும் A5.. எஸ்.பி வேலுமணி வழக்கில் சிக்கிய 2 முக்கிய புள்ளிகள்.. குறி வைத்த லஞ்ச ஒழிப்புத்துறை
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடுகளில் நடத்தப்பட்ட ரெய்டுகளை தொடர்ந்து மொத்தம் 17 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இதில் கே. சந்திர பிரகாஷ் மற்றும் சந்திரசேகர் ஆகியோர் மீதான வழக்குகள் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
Recommended Video
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தீவிரமான சோதனைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழ்நாடு முழுக்க மொத்தம் 52 இடங்களில் இந்த சோதனைகள் நடந்து வருகின்றன.
சென்னையில் மட்டும் 15 இடங்களில் சோதனை நடக்கின்றன. கோவையில் மொத்தம் 35 இடங்களில் சோதனை நடந்து வருகிறது. திண்டுக்கல் மற்றும் காஞ்சிபுரத்தில் தலா ஒரு இடத்தில் சோதனை நடந்து வருகிறது. காலை 6 மணிக்கு தொடங்கிய சோதனை 4 மணி நேரமாக தீவிரமாக நடந்து வருகிறது. கிட்டத்தட்ட எஸ்.பி வேலுமணிக்கு நெருக்கமான எல்லோரின் வீட்டிலும் ரெய்டு நடந்து வருகிறது.

என்னென்ன வழக்கு
இந்த சோதனையை தொடர்ந்து மொத்தம் 17 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இவர்கள் மீது 3க்கும் அதிகமான பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. என்னென்ன பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது என்று பார்க்கலாம்.
- ஐபிசி பிரிவு 120-B, சட்ட விரோத செயலை செய்வது, குற்றசதி மேற்கொள்ளவதற்கு எதிரான பிரிவு.
- ஐபிசி பிரிவு 420 : ஏமாற்றுதல், மோசடிகளுக்கு எதிரான வழக்கு பிரிவு
- ஐபிசி பிரிவு 40: இது இந்தி தண்டனை சட்டத்தில் குற்றம் என்ற பிரிவின் கீழ் வருவது ஆகும். குற்றம் புரிந்தவர்களுக்கு இந்த பிரிவுகளின் கீழ் வழக்கு சாத்தியப்படும்.
- ஊழல் தடுப்பு 1988 சட்ட பிரிவு : 109 IPCன் 13 (2) r/w 13 (i) (c) and 13 (1) (d) பிரிவுகள்: லஞ்ச ஒழிப்புத்துறையின் லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான சட்ட பிரிவுகள் ஆகும்.

யார் மீது?
A1 ஆக எஸ். பி வேலுமணி மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. A2வாக பி. அன்பரசன் என்பவரும், A3 ஆக கேசிபி எஞ்சினியர்ஸ் நிறுவனமும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. இது போக கே. சந்திரபிரகாஷ், ஆர். சந்திரசேகர், ஆர் முருகேஷ், ஜேசு ரோபர்ட் ராஜா, தி எஸ் டேக் மெஷினரி இந்தியா பிரைவேட் லிமிட்டட், Constronics இன்ப்ரா லிமிட்ட, கான்ஸ்ட்ரோமால் குட் பிரைவேட் லிமிட்டட், ஸ்ரீ மகா கணபதி ஜுவல்லரி பிரைவேட் லிமிட்டட், ஆலயம் பவுண்டேஷன் பிரைவேட் லிமிட்டட், வைதுர்யா ஹோட்டல்ஸ் பிரைவேட் லிமிட்டட், ரத்னம் லட்சுமி பிரைவேட் லிமிட்டட், ஆலம் தங்கம் மற்றும் வைரஸ் பிரைவேட் லிமிட்டட், ஏ. ஆர். இ.எஸ். பி.இ பிரைவேட் லிமிட்டட், சிஆர் கட்டுமான நிறுவனந்தின் கு. ரஞ்சன் மற்றும் சில அதிகாரிகள் மீது இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது.

எப்படி வழக்கு?
சென்னை, கோவை உள்ளிட்ட மாநகராட்சிகளில் பல்வேறு உள்கட்டமைப்பு பணிகளுக்கான டெண்டர்களில் முறைகேடு செய்ததாக எஸ்.பி வேலுமணி மீது வழக்கு பதியப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக அறப்போர் இயக்கம், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இதில் தலைமை நீதிபதி சஞ்சிப் பேனர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது

விசாரணை
அதன்படி இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறை எஸ்.பி பொன்னி விசாரணை நடத்த வேண்டும், இது தொடர்பாக அவர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்என்று சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டு இருந்தது. இந்த வழக்கில் சிறப்பு விசாரணை குழு எஸ்.பி வேலுமணிக்கு எதிரான புகாரில் வழக்கு பதிய முகாந்திரம் இல்லை என்று முந்தைய அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தது. இதை முந்தைய அரசு ஏற்றுக்கொண்டு, வழக்கை முடித்து வைக்கும்படி உயர் நீதிமன்றத்தில் கூறியது.

ஆட்சி மாற்றம்
ஆனால் அதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட, புதிய அரசு வழக்கு பதிய வேண்டும் என்று வாதம் வைத்தது.இந்த நிலையில்தான் கடந்த ஜூன் 21ம் தேதி சென்னை ஹைகோர்ட் முக்கிய உத்தரவு பிறப்பித்து இருந்தது. அதில் எஸ்.பி வேலுமணிக்கு எதிரான விசாரணை அறிக்கையை முந்தைய அரசு ஏற்றுக்கொண்டது. ஆனால் நீதிமன்றம் இதை ஏற்கவில்லை. இதனால் இந்த வழக்கை விரிவாக விசாரிக்க வேண்டும் என்று கூறியது. இதன் காரணமாக எஸ்.பி வேலுமணி மீதான வழக்கு சூடு பிடித்தது.

நேற்று புகார்
இதற்கு இடையில்தான் நேற்று எஸ். பி வேலுமணி மீது கோவையை சேர்ந்த திருவேங்கடம் புகார் அளித்தார். ரூ.1.2 கோடி பண மோசடி மற்றும் கொலை மிரட்டல் ஆகிய புகார்களை எஸ்.பி வேலுமணிக்கு எதிராக சென்னை காவல் ஆணையரிடம் திருவேங்கடம் வைத்தார். இந்த புகார் நேற்று அளிக்கப்பட்ட நிலையில் இன்று எஸ்.பி வேலுமணி வீடு மற்றும் அலுவலகங்களில் அதிரடி ரெய்டு நடந்துள்ளது.

முக்கிய புள்ளி
இந்த வழக்கில் கே. சந்திர பிரகாஷ் மற்றும் சந்திரசேகர் ஆகியோர் குறித்து தனியாக விவரங்கள் அடங்கி உள்ளன. சந்திர பிரகாஷ் இந்த வழக்கில் முக்கியமான குற்றவாளியாகவும் ஏ.4ஆகவும், சந்திரசேகர் ஏ4 ஆகவும் சேர்க்கப்பட்டு இருக்கிறார். இவர்களின் கேசிபி நிறுவனம் ஏ3 ஆக சேர்க்கப்பட்டுள்ளது. திருவேங்கடம் நேற்று கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகாரிலும் சந்திரசேகர் மீது புகார் அளித்து இருந்தார். சந்திசேகர் தன்னை மிரட்டியதாக திருவேங்கடம் புகாரில் கூறி இருந்தார். கே. சந்திர பிரகாஷ் மற்றும் சந்திரசேகர் இருவரும் கேசிபி எஞ்சினியர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர்கள்.

தொடர்பு
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு இருக்கும் பெரும்பாலான நிறுவனங்கள், நபர்கள் எதோ ஒரு வகையில் கே. சந்திர பிரகாஷ் மற்றும் சந்திரசேகருடன் தொடர்பு உடையவர்களாக உள்ளனர். இதனால் இவர்கள் இருவரும் இந்த வழக்கில் மிக முக்கிய புள்ளிகளாக பார்க்கப்படுகிறார்கள். இவர்கள் இருவரின் நிறுவனங்கள், இவர்களுக்கு நெருக்கமான நிறுவனங்கள் எல்லாம் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது. இவர்களிடம் இனி வரும் நாட்களில் தீவிர விசாரணைகள் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications