ஐஸ் கட்டி மழையும்; ஆப்பிள் தோட்டங்களும்; குளு குளு சிம்லாவுக்கு பேக் அப் செய்யும் சபாநாயகர் அப்பாவு!
சென்னை: சபாநாயகர் அப்பாவு குளு குளு பிரதேசமான சிம்லாவுக்கு மூன்று நாள் பயணமாக நாளை புறப்பட்டுச் செல்கிறார்.
தற்போது தமிழகத்தில் வெயில் காலம் கூட கிடையாதே அப்படியிருக்கும் போது அவர் எதற்கு சிம்லாவுக்கு செல்கிறார் என கேட்கத் தோன்றுகிறதா.
எல்லாம் டெல்லி மேலிடத்தின் அழைப்பும் அங்கீகாரமும் தான் காரணம் எனக் கூறப்படுகிறது.

சபாநாயகர்கள்
ஹிமாச்சல் பிரதேச மாநிலம் சிம்லாவில் நடைபெறும் பேரவைத் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சபாநாயகர் அப்பாவு 3 நாள் பயணமாக நாளை புறப்பட்டுச் செல்கிறார். சென்னையிலிருந்து டெல்லி சென்று பின்னர் அங்கிருந்து சிம்லாவுக்கு அவர் செல்கிறார். இதற்கான பயண முன்னேற்பாடுகள் தயாராக உள்ளன. தற்போது ராதாபுரம் தொகுதியில் முகாமிட்டு அணை திறப்பு, மழைவெள்ள பாதிப்பு ஆய்வு என பம்பரமாக சுழன்று வரும் அவர் ஏற்கனவே திட்டமிட்ட நிகழ்வு என்பதால் சிம்லா பயணத்தை தவிர்க்க விரும்பவில்லை.

அப்பாவு பேச்சு
சபாநாயகர்கள் மாநாட்டில் அப்பாவு பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து பேசவுள்ளார் என்றும் அவரது பேச்சு ஒட்டுமொத்த இந்திய சபாநாயகர்கள் மத்தியில் பெரிதாக கவனம் ஈர்க்கும் எனவும் கூறப்படுகிறது. சபாநாயகர் ஆவதற்கு முன்பு வரை தொலைக்காட்சி விவாதங்களில் புள்ளிவிவரங்களோடு பேசி எதிர்வாதம் செய்பவரை ஆஃப் செய்யக் கூடியவர் அப்பாவு. பேசுவதற்கு அவருக்கு சொல்லிக்கொடுக்க வேண்டியது இல்லை என்பதால் சபாநாயகர்கள் மாநாட்டில் அவரது பேச்சு நடுநாயகமாக அமையும் என நம்பிக்கை தெரிவிக்கப்படுகிறது.

3 நாள் பயணம்
இதனிடையே ஆப்பிள் தோட்டங்களை சுற்றிப்பார்க்கவும் சிம்லாவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. திங்கட்கிழமை காலை டெல்லி புறப்பட்டுச் செல்லும் அவர், புதன்கிழமை மாலை சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தற்போது மழை கொட்டித்தீர்த்து வருவதால், இந்த நேரத்தில் நெல்லை மாவட்டத்தில் உள்ள தனது ராதாபுரம் தொகுதியில் நிவாரணப் பணிகளுக்காக மக்களுடன் இருந்தால் நன்றாக இருக்கும் எனக் கருதிய சபாநாயகர் அப்பாவு அது குறித்தும் ஆலோசித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

1921-ம் ஆண்டு
ஆனால் சபாநாயகர்கள் மாநாட்டின் முக்கியத்துவம் கருதி அந்த நிகழ்ச்சியை அவர் புறக்கணிக்க விரும்பவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 1921-ம் ஆண்டு இந்திய சட்டப்பேரவைத் தலைவர்கள் மாநாடு சிம்லாவில் நடைபெற்றதும் அந்த நிகழ்வு நடந்து நூற்றாண்டை எட்டியுள்ளதும் திரும்பிப்பார்க்கத் தக்கது.












Click it and Unblock the Notifications