வெளியாட்கள் உள்ளே வர முடியாது.. பொதுக்குழு நடைபெறும் இடத்தில் பக்கா பிளான்! எடப்பாடி தரப்பு ஸ்கெட்ச்
சென்னை: நாளை அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், இதற்கான ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Recommended Video
அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்பதே கடந்த சில காலமாக பெரும் விவாதம் ஆகி உள்ளது. ஒற்றை தலைமை விவகாரம் முதலில் கட்சிக்குள்ளேயே எழுந்தது.
கடந்த மாதமே அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் ஒற்றை தலைமை குறித்த தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று கூறப்பட்டது.

அதிமுக பொதுக்குழு
இதையடுத்து பொதுக்குழுவுக்குத் தடை விதிக்கக்கோரி ஓபிஎஸ் தரப்பு நீதிமன்றம் சென்றது. அதைத் தொடர்ந்து ஜூன் 23இல் நடைபெற்ற பொதுக் குழுக் கூட்டத்தில் 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டது. மேலும், பெரும்பாலான தொண்டர்களை விரும்பும் ஒற்றை தலைமை தீர்மானத்துடன் இந்த 23 தீர்மானங்களும் அடுத்த பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டது. நாளை (ஜூலை 11) அதிமுக பொதுக் குழுக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது

தனி தனி மேடைகள்
நாளை காலை பொதுக்குழுக் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், இது தொடர்பான வழக்கிலும் நீதிமன்றம் நாளை காலை தான் தீர்ப்பு அளிக்க உள்ளது. வழக்கு ஒருபுறம் என்றாலும் கூட மறுபுறம் பொதுக்குழுக் கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வானகரம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெறும் இந்த கூட்டத்திற்காக மண்டப திடலில் தனித் தனி மேடைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

ஃபோஸ்டர்கள்
மேலும், நெடுஞ்சாலை முதல் கூட்டம் நடைபெறும் மண்டபம் வரை அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி படங்கள் இடம் பெற்றுள்ளன. ஒற்றரைக் கோடி தொண்டர்களின் ஒற்றை தலைவர் என்ற வாசகத்துடன் எடப்பாடி பழனிசாமியின் படம் இடம் பெற்றுள்ளது. அதேநேரம் ஒ.பன்னீர்செல்வத்தின் படங்கள் எங்கும் இடம் பெறவில்லை. இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் மொத்தம் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விறுவிறு பணிகள்
இதில் எடப்பாடி பழனிசாமி தற்காலிக பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. நீதிமன்ற உத்தரவு பாசிட்டிவாக வந்தால் சற்று நேரத்திலேயே பொதுக்குழுவைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் கிட்டதட்ட முடிந்துள்ள நிலையில், எஞ்சிய பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முந்தைய பொதுக்குழுக் கூட்டத்தில் வெளியாட்கள் நுழைந்துவிட்டதாகக் கூறப்பட்டது.

வெளியாட்கள்
நாளை நடைபெறும் பொதுக்குழுக் கூட்டத்தில் அதேபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருக்க பிரத்தியேக ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. அதிமுகவில் பொதுக் குழு மற்றும் செயற்குழுவில் மொத்தம் 2,655 உறுப்பினர்கள் உள்ளனர். பொதுக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் மாவட்ட வாரியாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு நபருக்கும் தனி சீரியல் எண் ஒதுக்கப்பட்டுள்ளது. தனி சீரியல் எண் உடன் கூடிய அடையாள அட்டையும் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பிரத்தியேக ஏற்பாடு
வெளியாட்கள் உள்ளே நுழைவதே தடுக்க Radio-frequency identification எனப்படும் ஆர்எஃப்ஐடி இயந்திரமும் பயன்படுத்தப்படுகிறது. இதுபோன்ற இயந்திரங்கள் தான் மெட்ரோ ரயில் நிலையங்களில் பயன்படுத்தப்படுகிறது. இதன் வழியே உள்ளே நுழையச் சிறப்பு அட்டை தேவை. அவை அடையாள அட்டை உடன் இணைக்கப்பட்டு, பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. சுருங்கச் சொல்ல வேண்டும் என்றால் அடையாள அட்டையை இயந்திரத்தில் காட்டினால் மட்டுமே உள்ளே நுழைய முடியும்.

வர முடியாது
பொதுக்குழு மற்றும் செயற்குழுவுக்கு தனித்தனியாக மேடைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இரண்டிற்கும் நுழைவாயில்களும் தனித்தனியாக உள்ளன. பொதுக்குழு உறுப்பினர்கள் செயற்குழு நடக்கும் இடத்திற்கு வர முடியாது. அதேபோல செயற்குழு உறுப்பினர்கள் பொதுக்குழு நடைபெறும் இடத்திற்கு வர முடியாது. இரு பொறுப்புகளையும் வகிப்பவர்களுக்குத் தனியாகச் சிறப்பு அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது.

பக்கா ஸ்கெட்ச்
இந்த முறை பொதுக்குழுக் கூட்டத்தில் வெளியாட்கள் நுழையலாம் என்பதால் அதைத் தடுக்க இதுபோன்ற சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் இடத்தில் மொத்தம் 20க்கும் மேற்பட்ட ஸ்கேனர்கள் பொருத்தப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆக, மொத்தத்தில் பொதுக்குழுக் கூட்டத்தைச் சிறப்பாக நடத்தி முடிக்க பக்காவாக ஸ்கெட்ச் போட்டுள்ளது எடப்பாடி தரப்பு!












Click it and Unblock the Notifications