தாம்பரம், செங்கல்பட்டு மின்சார ரயில் பயணிகளின் குரல் கேட்டிருச்சு.. பல்லாவரமேவா.. சட்டென வந்த குட்நியூஸ்
சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தில் நாளை முதல் ஆகஸ்ட் 14 வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதாவும், காலை 09.30 மணி முதல் 13.30 மணி வரையும் மற்றும் இரவு 22.00 மணி முதல் 23.59 வரை சென்னை பீச் முதல் தாம்பரம்/செங்கல்பட்டு செல்லும் ரயில்கள் பல்லாவரம் வரையும், செங்கல்பட்டிலிருந்து சென்னை பீச் செல்லும் ரயில்கள் கூடுவாஞ்சேரி வரை மட்டுமே இயக்கப்பட உள்ளதாகவும் வெளியான அறிவிப்பு ரத்தாகி உள்ளது.
அண்மையில் தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில், இன்று முதல் ஆகஸ்ட் 14 வரை தாம்பரம் ரயில்வே யார்டு மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளதால் சென்னை கடற்கரை-தாம்பரம்- செங்கல்பட்டு இடையே 55 மின்சார ரயில்கள் இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்படுவாக அறிவித்து இருந்தது.

அதிகாலை முதல் காலை 09:20 மணி வரை கால அட்டவணைப்படி மின்சார ரயில்கள் வழக்கம் போல் இயங்கும். மதியம் 01:00 மணியிலிருந்து இரவு 10:20 வரை கால அட்டவணைப்படி மின்சார ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் என்று கூறியிருந்தது.
பயணிகளின் சிரமத்தை குறைப்பதற்காக, பல்லாவரத்திலிருந்து கூடுவாஞ்சேரி வரை இரு மார்க்கங்களிலும் கூடுதல் பேருந்து சேவைகளை இயக்குவதற்கு மாநில போக்குவரத்து துறைக்கு வேண்டுகோள் வைக்கப்பட்டதாகவும் ரயில்வே கூறியிருந்தது.
ரயில்களின் ரத்து குறித்த விவரங்களை ரயில் நிலைய அறிவிப்பு (Station Announcement) / அறிவிப்பு பலகைகள் மூலமாகவும், மேலும் செய்தித்தாள்கள். டிவி சேனல்கள். சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் பயணிகள் தெரிந்துகொள்ளலாம் என்றும் ரயில்வே அறிவிப்பில் கூறியது.
மேலும், சென்னை எழும்பூர், பல்லாவரம், தாம்பரம், கூடுவாஞ்சேரி ஆகிய ரயில் நிலையங்களில் பயணிகள் உதவி மையம் (Passenger Help Desk) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், கூடுதலாக ரயில்வே பாதுகாப்பு படையினரும் / டிக்கெட் பரிசோதகர்களும் பயணிகளின் உதவிக்காக ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும், தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது.
இதையொட்டி சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் நேற்று மாலை வெளியிட்ட அறிவிப்பில், " தாம்பரம் ரயில் நிலையத்தில் 23.07.2024 முதல் 14.08.2024 வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், காலை 09.30 மணி முதல் பிற்பகல் 13.30 மணி வரையும் மற்றும் இரவு 22.00 மணி முதல் 23.59 வரை சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம்/செங்கல்பட்டு செல்லும் இரயில்கள் பல்லாவரம் இரயில் நிலையம் வரையும், செங்கல்பட்டிலிருந்து சென்னை கடற்கரை செல்லும் இரயில்கள் கூடுவாஞ்சேரி வரை மட்டுமே இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்திருந்தது,
எனவே, அவ்வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகள் நலன் கருதி மா.போ.கழகம் 23.07.2024 முதல் 14.08.2024 வரை மேற்குறிப்பிட்ட நேரங்களில் பல்லாவரம் வழியாக கூடுவாஞ்சேரிக்கு தற்போது 60 பேருந்துகள் மூலம் 571 பயண நடைகள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் விமான நிலையம் மெட்ரோ முதல் செங்கல்பட்டுக்கு கூடுதலாக 50 பெரிய பேருந்துகளை மாநகர போக்குவரத்துக் கழகம் இயக்க உள்ளதாக கூறியிருந்தது.
மற்றும் பல்லாவரம் ரயில் நிலையத்திலிருந்து பல்லாவரம் பேருந்து நிலையத்திற்கு 5 சிற்றுந்துகள் மற்றும் கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் முதல் கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்திற்கு 5 சிற்றுந்துகள் shuttle service-ஆக இயக்கப்பட உள்ளதாக கூறியிருந்தது.
ஆனால் எல்லாமே ஒரே இரவில் தலைகீழாக மாறியது. தெற்கு ரயில்வே தனது அறிவிப்பினை வாபஸ் பெற்றது. பகல் நேரங்களில், அதாவது காலை 09.30 மணி முதல் பிற்பகல் 13.30 மணி வரை ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் என்றும் இரவு 22.00 மணி முதல் 23.59 வரை மட்டுமே ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக கூறியது. இதையடுத்து சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் தாம்பரம் யார்டின் பராமரிப்பு பணிகளுக்காக ரத்து செய்யப்பட்டிருந்த பகல் நேர புறநகர் ரெயில் சேவைகள் 23-ம் தேதி முதல் ஆகஸ்டு 2-ம் தேதி வரை வழக்கமான கால அட்டவணையின்படி இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு 10 30 மணி முதல் நள்ளிரவு வரை மட்டும் புறநகர் ரெயில் சேவைகள் முன்பு அறிவித்தது போலவே இயங்காது என்று கூறப்பட்டுள்ளது. எனவே மாநகரப் போக்குவரத்து கழகம் மூலம் அறிவிக்கப்பட்டிருந்த சிறப்பு பஸ்கள் தேவையின் அடிப்படையில் இயக்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications