கல்லூரி அருகே கஞ்சா விற்ற 2 பேர்.. தூக்கிய போலீஸ்.. 12 ஆண்டு கடுங்காவல்.. நீதிமன்றம் பரபர தீர்ப்பு
தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த கோட்டைசாமியும், சென்னை சத்யா நகரை சேர்ந்த உதயகுமாரும் 40 கிலோ கஞ்சாவை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
சென்னை: சென்னையை அடுத்த மாதவரத்தில் கல்லூரி அருகே கஞ்சா விற்ற இருவருக்கு தலா 12 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.4.60 லட்சம் அபராதம் விதித்தும் சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை மாதவரத்தில் உள்ள கல்லூரி அருகே ஆட்டோ ஒன்றில் கஞ்சா விற்கப்படுவதாக போதை பொருள் தடுப்பு குற்ற புலனாய்வுத் துறைக்கு கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், அந்த துறை அதிகாரிகள் அங்கு சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கிருந்த ஆட்டோ ஒன்றில் தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த கோட்டைசாமி என்பவரும், சென்னை சத்யா நகரை சேர்ந்த உதயகுமார் என்பவரும் சேர்ந்து 40 கிலோ கஞ்சாவை விற்பனை செய்வதற்காக, 50 கிராம் பாக்கெட்டுகளாக இரு மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, கோட்டைசாமி, உதயகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், அதுதொடர்பான வழக்கு சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி சி.திருமகள் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிசெய்தார். இதைத்தொடர்ந்து, குற்றவாளிகள் கோட்டைசாமி, உதயகுமார் ஆகிய இருவருக்கும் தலா 12 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
மேலும், கோட்டைசாமிக்கு ரூ.1.70 லட்சம் அபராதமும், உதயகுமாருக்கு ரூ.2.90 லட்சம் அபராதமும் என மொத்தமாக ரூ. 4 லட்சத்து 60 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications