தப்பித்த அமைச்சர்.. பொன்முடி உள்ளிட்ட 7 பேரும் விடுதலை.. சென்னை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமைச்சர் பொன்முடிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த நில அபகரிப்பு வழக்கில் சென்னை சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. அமைச்சர் பொன்முடியை விடுதலை செய்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்து வரும் க.பொன்முடி கடந்த 1996-ம் ஆண்டு முதல் 2001ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த போது சைதாப்பேட்டை ஸ்ரீநகர் வடக்கு காலனி பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான 3 ஆயிரத்து 630 சதுர அடி இடத்தை அபகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டதாக கடந்த 2003ஆம் ஆண்டு புகார் எழுந்தது.

Special court to deliver Verdict today in the land grabbing case against Minister Ponmudi

அமைச்சர் பொன்முடி தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி அந்த இடத்தில் சட்டவிரோதமாக குடியிருந்து வந்த கண்ணன் என்ற கண்ணப்பனை வெளியேற்றி விட்டு போலி ஆவணங்களை தயாரித்து பொன்முடியின் மாமியார் சரஸ்வதி பெயரில் அந்த இடத்தை பதிவு செய்து ரூ.35 லட்சம் மதிப்பில் அங்கு கட்டிடம் கட்டியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தி, பொன்முடி, அவரது மாமியார் சரஸ்வதி, அப்போதைய அடையாறு சார்-பதிவாளர் புருபாபு, கிட்டு என்ற சைதை கிட்டு உள்ளிட்ட 10 பேர் மீது 27.8.2003 அன்று வழக்குப்பதிவு செய்தனர். விசாரணை முடித்து 2.9.2004 அன்று பொன்முடி உள்ளிட்ட 10 பேருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்தநிலையில் தன்னை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி அமைச்சர் பொன்முடி அதே நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், அமைச்சர் பொன்முடியை வழக்கில் இருந்து விடுவித்து 26.4.2007 அன்று உத்தரவிட்டது.

இதை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. விசாரணை முடிவில், பொன்முடியை வழக்கில் இருந்து விடுவித்து சிறப்பு கோர்ட் பிறப்பித்த உத்தரவை ஐகோர்ட்டு 6.9.2017 அன்று ரத்து செய்தது. இதைத்தொடர்ந்து பொன்முடி உள்ளிட்ட 10 பேர் மீதான வழக்கு விசாரணை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நடந்தது.

இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போதே அமைச்சர் பொன்முடியின் மாமியார் சரஸ்வதி, சார்-பதிவாளர் புருபாபு, சைதை கிட்டு ஆகியோர் மரணம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து பொன்முடி உள்ளிட்ட மற்ற 7 பேர் மீதான வழக்கு விசாரணை நடந்து வந்தது.

இந்த வழக்கில் அரசு தரப்பில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ராஜரத்தினம் உள்பட 90-க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 180-க்கும் மேற்பட்ட சான்றாவணங்கள் லஞ்ச ஒழிப்புத்துறையால் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு விசாரணையும் முடிவடைந்த நிலையில் இன்று நீதிபதி ஜெயவேல் தீர்ப்பு அளித்துள்ளார்.

அமைச்சர் பொன்முடிக்கு எதிரான முக்கிய வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாவதால் அரசியல் களத்தில் பரபரப்பு நிலவி வந்தது. ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கை திமுக உன்னிப்பாக கவனித்து வந்தது.

இந்நிலையில், நில அபகரிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடியை விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. குற்றம் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்ட 7 பேரையும் விடுவித்தது சென்னை சிறப்பு நீதிமன்றம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+