Exclusive: ஸ்டாலின் எளிமையான தலைவர்... செல்ஃபி எடுத்தது எப்படி..? விவரிக்கும் நடிகை யாஷிகா ஆனந்த்..!
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு எளிமையான தலைவர் என புகழாரம் சூட்டுகிறார் நடிகை யாஷிகா ஆனந்த்.
Recommended Video
மக்களிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அன்பு காட்டுவதாகவும் இவரைப் போல் மற்ற தலைவர்களும் எளிமையாக இருக்க வேண்டும் எனவும் கூறினார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் செல்ஃபி எடுத்தது குறித்து ஒன் இந்தியா தமிழிடம் பிரத்யேகமாக சில விவரங்களை பகிர்ந்துகொண்டார்.
அதன் விவரம் பின்வருமாறு;

சைக்கிளிங்
''சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் வார இறுதி நாட்கள் அல்லது ஓய்வு கிடைக்கும் நாட்களில் தோழிகளுடன் சைக்கிளிங் செல்வது வழக்கம். அந்த வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று எனது தோழிகளுடன் மாமல்லபுரத்திலிருந்து கோவளத்திற்கு சைக்கிளிங் செய்தேன். அப்போது பாதுகாப்பு படையினர் புடை சூழ முதலமைச்சர் சைக்கிளிங் செய்வதை பார்த்தோம்.''

எளிமை
''இதையடுத்து முதலமைச்சரை சந்திக்க விரும்பிய நானும் எனது தோழிகளும் அவருக்கு அருகே சென்று குட் மார்னிங் கூறினோம். எந்தவித பந்தாவும் இல்லாமல் எளிமையாக, கனிவாக பேசினார் . அப்போது ஸ்டாலினிடம் பேசிய எனது தோழி ஒருவர், தாம் முதல்முறை வாக்களித்ததாகவும் அதுவும் திமுகவுக்கு வாக்களித்த நிலையில் நீங்கள் வெற்றிபெற்றிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது எனவும் கூறினார்.''

செல்ஃபி
''முதலமைச்சர் ஸ்டாலின் இதை கேட்டுக்கொண்டார். பிறகு நாங்கள் உங்களுடன் புகைப்படம் எடுக்கலாமா எனக் கேட்டோம். அவருடன் வந்த சைக்கிளிஸ்ட்களில் ஒருவர் புகைப்படம் எடுத்தார். நான் முதல்முறையாக அப்போது தான் ஸ்டாலினை நேரில் பார்த்ததால், அவருடன் நானும் செல்ஃபி எடுத்துக்கொண்டேன்.''

அன்பு
''ஸ்டாலின் நினைத்திருந்தால் எங்களிடம் பேசாமல் கூட சென்றிருக்க முடியும். ஆனால் அவர் எல்லோரிடத்திலும் அன்பு காட்ட வேண்டும் என நினைக்கிறார். எங்களை சந்தித்ததை போலவே அவர் சைக்கிளிங் சென்ற வழியில் ஏராளமான பொதுமக்களையும் நின்று சந்தித்து பேசியதை பார்க்க முடிந்தது. இவரை போல் எல்லா தலைவர்களும் எளிமையாக இருந்தால் மக்கள் எளிதாக அணுக முடியும்.''












Click it and Unblock the Notifications