ஹைய்யா.. ரொம்ப நாள் ஆசை, பீச்சுக்கு வந்துட்டேன்.. கடலலையில் கால் நனைத்து பூரித்த மாற்று திறனாளி பெண்
மெரினா பீச்சில் மாற்று திறனாளி பெண் விளையாடும் வீடியோ வைரலாகிறது
சென்னை: "நானும் பீச்சுக்கு வந்துட்டேன்.. ரொம்ப நாள் ஆசை எனக்கு இன்று நிறைவேறிவிட்டது" என்று கடலில் கால் நனைத்த மாற்றுத்திறனாளி பெண்ணின் மகிழ்ச்சி வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது.
உலகம் முழுதும் டிசம்பர், 3ம் தேதி, உலக மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.. வழக்கமாக, மாற்றுத்திறனாளிகள் கடல் அலையில் நனைந்து ரசிக்கும் வகையில், தற்காலிகமாக பிரத்யேக பாதை அமைக்கப்படுவது வழக்கம்...
Recommended Video
ஆனால், இந்த 2 வருடங்களாகவே கொரோனா பரவல் காரணமாக, மாற்றுத்திறனாளிகளுக்கான பாதை எதுவும் அமைக்கப்படவில்லை... அதுவும் இல்லாமல் கடந்த ஆண்டு அளவுக்கு அதிகமான மழையும் பெய்து கொண்டே இருந்தது.. இதனால் பீச்சில் பாதை அமைப்பதில் தாமதம் ஏற்பட்டது...

மாற்றுதிறனாளி
இந்நிலையில்தான், மெரினாவில் மாற்றுத்திறனாளிகள் கடற்கரையின் மிக அருகே சென்று, அலைகளில் காலை நனைத்து மகிழும் வகையில் பிரத்தியேக பாதை கடந்த சில தினங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டுள்ளது... இந்த பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள மரப்பலகை பாதையை, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு, இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

உதயநிதி
இந்த பாதையை ரிப்பன் வெட்டி உதயநிதி திறந்து வைத்தபோதே, அங்கிருந்த மாற்றுத்திறனாளிகளுடன் கடல்பரப்பு வரை சென்று கால் நனைத்து மகிழ்ந்தார்.. உடனே பீச்சில் வைக்கப்பட்டிருக்கும் சக்கர நாற்காலிகளை பயன்படுத்தி, மாற்றுத்திறனாளிகளும் கடலலையில் உற்சாகமாக விளையாடி மகிழ்ந்தனர்... ஜனவரி 16ம் தேதி வரை, தற்காலிக நடைபாதையை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது இதனை மாற்று திறனாளிகள் சிறப்பாக பயன்படுத்தி வருகின்றனர்.

சக்கர நாற்காலி
பீச்சுக்கு வரும் எத்தனையோ பேர், அலையில் காலார நடந்தும், தண்ணீரில் விளையாடியும் வந்தபோது, இதையெல்லாம் தூரத்தில் இருந்தே மாற்று திறனாளிகள் ஏக்கத்துடன் பார்த்து வந்தனர்.. ஆனால் இப்போது அப்படி இல்லை, கடலில் கால் நனைத்து மகிழ்ச்சியாக பொழுதை கழிக்கின்றனர்.. சக்கர நாற்காலியில் உட்கார்ந்து ஆசை தீரும்வரை மகிழ்ந்து வருகின்றனர்..

வைரல் வீடியோ
அந்த வகையில், ஒரு வீடியோவும் வெளியாகி வைரலாகி வருகிறது.. மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் கடலை பார்த்த ஆனந்தத்தில், "நானும் பீச்சுக்கு வந்துவிட்டேன்.. என் நீண்ட நாள் ஆசை நிறைவேறி விட்டது" என்று சொல்லி சொல்லி மகிழ்கிறார்.. கைகளை தட்டி தட்டி உற்சாகத்தில் பூரித்து போகிறார்.. இந்த வீடியோவை பார்க்கும், பொதுமக்களும் இனம் புரியாத ஆனந்தம் ஏற்பட்டு வருகிறது.. கடலலையில் கால் நனைத்து, பலநாள் ஆசையை, ஆசை தீர தீர்த்து தீர்த்து வருகின்றனர் மாற்று திறனாளிகள்..!












Click it and Unblock the Notifications