திருச்சியிலிருந்து தாம்பரத்திற்கு இன்று சிறப்பு ரயில்! முன்பதிவு தேவையில்லை.. தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை: கோடை விடுமுறை முடிய இருக்கும் நிலையில், பலரும் தங்கள் சொந்த ஊர் திரும்பி வருகின்றனர். இந்நிலையில் திருச்சியிலிருந்து தாம்பரத்திற்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது.
10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1 முதல் ஏப்ரல் 8ம் தேதி வரை நடத்தப்பட்டது. அதேபோல், இந்தாண்டு மக்களவைத் தேர்தலும் வந்ததால் இதர வகுப்புகளுக்கும் வழக்கத்தை விட முன்கூட்டியே ஆண்டு இறுதித் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன. இந்நிலையில், ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது.

எனவே பலரும் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர். எனவே பல சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல தெற்கு ரயில்வே சிறப்பு ரயிலை அறிவித்திருக்கிறது.
அதாவது திருச்சியிலிருந்து, தாம்பரத்திற்கு முன்பதிவில்லாத சிறப்பு மெமு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் இன்று இரவு 11 மணிக்கு திருச்சியிலிருந்து புறப்பட்டு, நாளை காலை 6 மணிக்கு தாம்பரம் வருகிறது. இந்த ரயில் திருவெரும்பூருக்கு இரவு 11.20க்கும், பூதலூருக்கு 11.36, தஞ்சைக்கு 11.57க்கு, பாபநாசத்திற்கு 12.21, கும்பகோணத்திற்கு 12.34, மயிலாடுதுறை 12.54, வைதீஸ்வரன் கோயில் 1.13, சீர்காழி 1.20, சிதம்பரம் 1.33, கடலூர் துறைமுகம் 2.06, திருபாதிபுலியூர் 2.13, பன்ருட்டி 2.42, விழுப்புரம் 3.40, திண்டிவனம் 4.13, செங்கல்பட்டு 5.18 என இறுதியாக தாம்பரத்திற்கு 6.05க்கு வந்து சேருகிறது.
நாகர்கோவிலிருந்து தாம்பரத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். இருப்பினும், வார இறுதி என்பதாலும், கோடை விடுமுறை முடிவதாலும் ரயிலில் பயணிகள் கூட்டம் அலை மோதுகிறது. எனவே கூட்டத்தை சமாளிக்க கூடுதல் ரயிலாக இந்த சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த சில நாட்களாக தெற்கு ரயில்வேயின் நடைவடிக்கைகள் வரவேற்பை பெற்றிருக்கின்றன. குறிப்பாக புனித அந்தோனியார் தேவாலயம் திருவிழாவையொட்டி சென்னை எழும்பூர்-சேலம் ரயில் மேல்நாரியப்பனூர் ரயில் நிலையத்தில் தற்காலிகமாக நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
வழக்கமாக கோயில் திருவிழாக்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். திருவண்ணாமலை கிரிவலத்துக்கு சென்னையிலிருந்தும், விழுப்புரத்திலிருந்தும் அடிக்கடி சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இதனை தொடர்ந்து, தற்போது தேவாலய திருவிழாவுக்காக சென்னை எழும்பூரில் இருந்து சேலம் வரை இயக்கப்படும் ரயில் விழுப்புரம் அருகே உள்ள மேல்நாரியப்பனூர் ரயில் நிலையத்தில் தற்காலிகமாக நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது.
இந்த கோயிலில் ஆண்டுதோறும் திருவிழா வெகு விமர்சையாக நடத்தப்பட்டு வருகிறது. இக்கோயிலின் ஸ்தல வரலாற்றை பொறுத்த அளவில், சுமார் 1845ம் ஆண்டு இக்கோயில் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. அப்போதிலிருந்து இப்போது வரை கோயிலின் திருவிழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
அதேபோல இந்த ஆண்டும் திருவிழா சிறப்பாக நடத்தப்பட இருக்கிறது. இந்த கோயிலுக்கு செல்பவர்கள் வழக்கமாக விருத்தாசலம் - சேலம் பயணிகள் ரயில் மூலமாக வருவார்கள். விருத்தாசலம் - சேலம் பயணிகள் ரயில் காலை 07.15 மணி, காலை 11.30 மணி, மாலை 02.30 மணி, இரவு 08.30 மணி ஆகிய நேரங்களில் மேல்நாரியப்பனூர் வந்து சேரும்.
இது தவிர காரைக்கால் - பெங்களூர் ரயில் காலை 11.30 மணி, பெங்களூரு - காரைக்கால் ரயில் மாலை 03.00 மணிக்கும் திருவிழா நாட்களில் மேல்நாரியப்பனூர் நின்று செல்லும். கள்ளக்குறிச்சி - சேலம் சென்னை நெடுஞ்சாலையில், V கூட்ரோடு இறங்கி, அங்கிருந்து ஷேர் ஆட்டோ மற்றும் மினிபஸ் மூலம் இந்த தேவாலயத்திற்கு வந்து சேரலாம்.
இப்படி இருக்கையில் எழும்பூர்-சேலம் ரயில் மேல்நாரியப்பனூர் ரயில் நிலையத்தில் தற்காலிகமாக நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது. அதாவது, ரயில் எண் 22153 கொண்ட எழும்பூர்-சேலம் சூப்பர் ஃபாஸ்ட் ரயில் ஜூன் 10ம் தேதி முதல் 13ம் தேதி வரை இயக்கப்படுகிறது. இந்த 4 நாட்களும் சென்னை எழும்பூரிலிருந்து இரவு 11.55க்கு இந்த ரயில் புறப்படுகிறது.
இந்த ரயில் இந்த நான்கு நாட்களும் மேல்நாரியப்பனூர் ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும். அதிகாலை 4.19க்கு மேல்நாரியப்பனூர் ரயில் நிலையத்திற்கு வந்து சேரும் ரயில், ஒரு நிமிடம் கழித்து 4.20க்கு புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்புகளால் ரயில் பயணிகள் மகிழச்சியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications