ஒலிம்பியாட் போட்டியை காண குடும்பத்துடன் படையெடுத்த பார்வையாளர்கள்; விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்
சென்னை: 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையையொட்டியுள்ள மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் நிலையில், போட்டியை காண ஏராளமானோர் குவிந்து வருகின்றனர்.
இந்தியாவில் சர்வதேச செஸ் போட்டிகள் நடத்தப்படுவது குறித்து 4 மாதங்களுக்கு முன்னர்தான் முடிவெடுக்கப்பட்டது. ஆனால் இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை அரசு தீவிரமாக முன்னெடுத்தது. அதன் அடிப்படையில் போட்டி தற்போது சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இதுவரை நடைபெற்ற ஒலிம்பியாட் போட்டிகளைவிட சென்னை ஒலிம்பியாட் போட்டியை காண அதிகமானோர் வந்துள்ளனர். தற்போது நூற்றுக்கணக்கானோர் நீண்ட வரிசையில் நின்று போட்டியை காண காத்திருக்கின்றனர்.
செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா.. பதக்கங்களை வழங்குவது யார்.. அமைச்சர் சொன்ன சீக்ரெட்!
தொடக்கம்
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள ஃபோர் பாயின்ட்ஸ் ரெசார்ட்டில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் கடந்த 28ம் தேதி தொடங்கிய கோலாகல விழாவில், செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். அப்போது, இந்திய அணியினருக்கு கருப்பு காய்களை பிரதமர் தேர்வு செய்தார். அதன்படி, இந்திய வீரர், வீராங்கனைகள் கருப்பு காய்களைக் கொண்டு விளையாட்டை தொடங்கினர்.
சிற்பபான ஏற்பாடுகள்
இந்த போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள், நடுவர்கள், பயிற்சியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். செஸ் ஒலிம்பியாட் வரலாற்றிலேயே சென்னை போட்டிக்குத்தான் 188 அணிகள் ஓபன் பிரிவிலும், பெண்கள் பிரிவில் 162 அணிகளும் பங்கேற்றுள்ளன. உலக செஸ் சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே) உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் போட்டியில் கலந்து கொண்டுள்ளனர். இந்த ஒலிம்பியாட் போட்டி மொத்தம் 11 சுற்றுகளைக் கொண்டது. கிளாசிக்கல் ஸ்விஸ் லீக் முறையில் ஆட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. போட்டிக்கான ஏற்பாடுகளை இந்திய செஸ் கூட்டமைப்பு (ஏஐசிஎஃப்), உலக செஸ் கூட்டமைப்பு (ஃபிடே) ஆகியவற்றுடன் இணைந்து தமிழ்நாடு அரசு சிறப்பான முறையில் நடத்தி வருகிறது.
பார்வையாளர்கள்
இந்நிலையில் இந்த போட்டியை கண்டு ரசிக்க ஏராளமானோர் வந்த வண்ணம் உள்ளனர். நாளொன்றுக்கு சுமார் 500 பேர் வந்து செல்கின்றனர். போட்டி துவங்குவதற்கு முன்னரே 40 சதவிகித டிக்கெட்டுகள் ஆன்லைனில் விற்று தீர்ந்துவிட்ட நிலையில் விடுமுறை நாட்களில் மேலும் கூட்டம் குவிந்து வருகிறது. மாநிலம் முழுவதிலும் பல மாவட்டங்களிலிருந்து மக்கள் குடும்பத்துடன் வந்து போட்டியை கண்டு ரசித்து வருகின்றனர். "இந்த போட்டி இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் தற்போது நடைபெறுகிறது. இனி வெவ்வேறு நாடுகளில்தான் நடைபெறும் அதனால் அங்கு சென்று பார்க்க முடியாது என்பதால் தமிழ்நாட்டிலேயே பார்த்துவிடலாம் என வந்திருக்கிறோம்" என்று பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
டிக்கெட்டுகள்
இந்த போட்டிக்கு மொத்தமாக 6,500 டிக்கெட்டுகள் விற்பனை செய்ய திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது வரை 4,700க்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துள்ளன. இதில் ரூ.2,000 மற்றும் ரூ.200 டிக்கெட்டுகள் அதிக அளவு விற்றுள்ளன என்றும் இதுவரை நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் விற்ற டிக்கெட்டுகளை விட இந்த போட்டியில்தான் டிக்கெட்டுகள் அதிகம் விற்று தீர்ந்துள்ளன என சர்வதேச சதுரங்க கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.